
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
தொகுதிகள் உள்ள அந்தந்த மாவட்டங்களில் மாவட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டி வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.
இறுதியாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ச்சுணன் தலைமையில் சென்னையில் நடந்த
கூட்டத்தில் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதன்முடிவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, என்.பாண்டி பழநி தொகுதியிலும், எம்.சின்னதுரை கந்தர்வக்கோட்டையிலும் (தனி), ஆர்.செல்லசாமி பத்மநாபபுரத்திலும், எல்.சுந்தரராஜன் திருவொற்றியூரிலும், டி.லதா கீழ்வேளூர் (தனி) தொகுதியிலும்
போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இவர்களில் எம்.சின்னதுரை, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். என்.பாண்டி கடந்தமுறை
திண்டுக்கல்லில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த தேர்தலில் கீழ்வேளூரில் வெற்றிபெற்ற நாகை மாலிக்கு இம்முறை வாய்ப்பு
வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.லதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


