
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து சில நாட்களாக எந்தப் பேச்சும் இல்லாமல் இருந்தது.இந்நிலையில்,
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்றிரவு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.அவரை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள், உரிமை மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் செங்கோட்டையன் செய்தியார்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
ஒருங்கிணைந்த அதிமுக என்பதை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது நல்ல முடிவாக இருக்கும். பாஜக என்னை அழைத்து எந்த இன்ஸ்ட்ரக்சனும் கொடுத்ததில்லை. நான் பாஜக தலைவர்களை நேரில் பார்த்தேன். அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது. பாஜக தரப்பில் அழைக்கப்பட்டே சென்றேன் எனச் சொன்னேன்.
ஒரு முறை அழைத்தார்கள், 2 ஆவது முறை நானே சந்தித்தேன். மூன்று முறை இதுவரை சந்தித்துள்ளேன் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதாவது…
அதிமுகவில் இணைவீர்களா?
மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
நீங்கள், டிடிவி.தினகரன் ஆகியோர் இணைந்து விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகிறீர்களாமே?
கூட்டணி குறித்து எந்தக்கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே ஆசை. அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது. ஒருங்கிணைப்பு எப்போது நடக்குமென பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையனின் இந்தக் கருத்துகளால் அதிமுக வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ள்து.


