தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான பரப்புரை இலச்சினை மற்றும் பாடலை சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது….
சென்னைக்கு அமித்ஷா வந்தபோது ஐடிசி ஓட்டலில் தெளிவாகப் பேசி உள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் என்று கூறினார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். நான்தான் (எடப்பாடி) முதலமைச்சர் வேட்பாளர். கூட்டணி குறித்து அமித்ஷா தெளிவாகக் கூறிவிட்டார். இதுபற்றிய செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்தது என்றார்.
அப்போது செய்தியாளர்கள், அதிமுகவில் இருந்து ஒரு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித்ஷா கூறியுள்ளார். இது முதலமைச்சர் வேட்பாளரைத் தெளிவுபடுத்தாத நிலை உள்ளதே?’ என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, இதில் டெல்லி எடுக்கிற முடிவுதான். உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறியபிறகு, அதற்கு அடுத்தாற்போல் யார் பேசினாலும், அது சரியில்ல என்பதுதான் என்னுடைய கருத்து. இப்போது, அதைப்பற்றியே கேள்வி கேட்டு, அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுப்பது சரியா? என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி இப்படிச் சொன்னதும் அதிமுக தலைவர்களும், நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அமித்ஷா, சென்னையில் எடப்பாடியை வைத்துக் கொண்டு பேசும்போது, அதிமுக, பாஜக கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்படுவார் என்றார். அதன்பின்னர் தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி அமைச்சரவை பற்றி அமித்ஷா கூறவில்லை.அதிமுக, பாஜக இணைந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் கூறினார் என்று பதில் அளித்தார்.
அதற்குப் பிறகு 2 முறை தொலைக்காட்சி பேட்டிகளில், தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்பதை அமித்ஷா வலியுறுத்தினார்.அதோடு, சென்னையில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தவர், டெல்லி பேட்டிகளில் அதிமுக சார்பில் ஒருவர் முதலமைச்சராக முன்னிறுத்தப்படுவார் என்றார். ஏன் அவர், எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அறிவிக்காமல், அதிமுகவில் இருந்து ஒருவர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார் என்பதில்தான் அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால்தான் தமிழக பாஜகவினர் கூட்டணி அமைச்சரவை குறித்து அமித்ஷா முடிவு செய்வார் என்கின்றனர்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்துப் பேசுவதற்கு முன்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களுடன் நிர்மலா சீதாராமனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் பின்னர்தான் எடப்பாடி பழனிச்சாமி பணிந்து, அமித்ஷாவை சந்தித்தார். இதனால் பாஜகவின் மனதில் இரகசிய திட்டம் ஏதாவது இருக்கலாம் என்பதைத்தான் அவர்களது நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
அதேநேரத்தில் அதுதெரிந்துதான், முதலமைச்சர் வேட்பாளரை அமித்ஷா முடிவு செய்வார் என்று அந்தர்பல்டி அடித்து எடப்பாடி கூறியிருக்கலாம் என்றும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரைக் கூட அமித்ஷாதான் முடிவு செய்வார் என்று அதிமுகவின் பொதுச் செயலாளரே கூறியிருப்பது தொண்டர்களை அதிர்ச்சியும், ஆத்திரமடையவும் வைத்துள்ளது.
ஏற்கனேவே எதிர்க்கட்சிகள் பாஜகவின் அடிமைக்கட்சிதான் அதிமுக என்று விமர்சித்து வரும்நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டி அமைந்திருப்பதாகவும் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியுடன் பேசி வருகின்றனர்.