சட்டப்படி அதிமுக என்னுடையது – ஓபிஎஸ் மனு விவரம்

திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளிக்கப்பட்டது. இதுவரையிலும் எந்தப் பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் 2024 டிசம்பர் 4 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், “சூர்யமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பழனிசாமி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

இந்த வழக்கில்,முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது….

2021 இல் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகியோரை முதன்மை உறுப்பினர்கள் மூலம் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுத்ததே கட்சி அடிப்படை விதியின் படி சட்டப்பூர்வமானது. ஒருமுறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும், அதனை பொதுக்குழுவின் ஒரு சிறப்புத் தீர்மானம் மூலம் கலைத்து விடவோ அல்லது செல்லாது என்று முடக்கி விடவோ முடியாது.

மேலும் கடந்தமுறை முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைமையின் பதவிக் காலம் 2026 டிசம்பர் வரை உள்ளது, எனவே அதனை ஒரு சிறப்புத் தீர்மானம் மூலம் செல்லாது என அறிவிக்க கட்சியின் அடிப்படை சட்டவிதி அனுமதிக்காது. அதேபோல கட்சியின் அடிப்படை சட்ட விதியில் முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையை முன்கூட்டியே அல்லது நீக்கம் செய்ய எந்த வழிவகையும் இல்லை. அதேபோல, 2021 இல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்ட தலைமைக்கான அந்தத் தேர்தலை எவரும் இதுவரை எதிர்க்கவில்லை, மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் எதிர்க்கவில்லை.

என்னை கட்சியை விட்டு நீக்கிய நடவடிக்கை என்பது கட்சியின் அடிப்படை விதிக்கு முரணாக எடப்பாடி பழனிச்சாமி எடுத்த சட்டவிரோத நடவடிக்கை ஆகும். ஏனெனில் ஒருவரை நீக்குவது என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் ஆகும். குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை பொதுக்குழு கூடி கட்சியை விட்டு விலக்க அதிகாரமோ, சட்ட விதியோ இல்லை. பொதுக்குழு என்பது கட்சியின் கொள்கை மற்றும் நிகழ்வுகளை வரையறுப்பதற்கானது மட்டுமே.

மேலும் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையிலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அ.தி.மு.க கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தின் உரிமை எனக்கானது ஆகும். மேலும் தற்போது உள்ள கட்சியின் நிர்வாகம் என்பது சட்டவிரோதமானது, அவ்வாறு சட்டவிரோதமாகச் செயல்படும் கட்சித் தலைமைக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்த அதிகாரம் கிடையாது. எனவே தற்போதைய அ.தி.மு.க கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்த எடப்பாடி பழனிச்சாமிக்குத் தடை விதிக்க வேண்டும், அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் வசம் இரட்டை இலைச் சின்னத்தையும் , கட்சியையும் ஒப்படைக்க வேண்டும், எங்கள் தரப்பையே அ.தி.மு.க என்று அங்கீகரிக்க வேண்டும். மேலும் அ.தி.மு.க தொடர்பாக உரிமை வழக்குகள் சிவில் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, எனவே அதில் முடிவு வரும் வரை எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ள கட்சி தொடர்பான அதிகாரங்கள், உரிமைகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response