அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரசுக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட காங்கிரசு தலைவர்கள் சிவ.இராஜசேகரன், எம்.பி.இரஞ்சன்குமார், முத்தழகன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு, அடையாறு துரை ஆகியோர் ஏற்பாட்டில், கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகத் தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் முழக்கங்கள் எழுப்பினர்.
அந்நிகழ்வில் செல்வப்பெருந்தகை பேசியதாவது…..
ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலக் கட்சிகளை ஒடுக்குகிறது எங்கெங்கெல்லாம் பாஜக ஆட்சி இல்லையோ அங்கெல்லாம் அந்த மாநிலக் கட்சிகளை ஒடுக்குவது, பிள்ளை பிடிப்பவர்கள்போல் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைப் பிடிப்பது போன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த காங்கிரசுத் தலைவர்கள் இந்த நாட்டை பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். கிழக்கிந்திய கம்பெனியை வெளியேற்ற வேண்டும். இந்த நாட்டு மக்கள் முழுமையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்று போராடினர்.
நாட்டின் விடுதலைக்கும், மோடிக்கும், பாஜகவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?இந்த நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் யாராவது பாஜக, ஆர்எஸ்எஸ் இல் இருக்கிறார்களா? நாட்டின் விடுதலைக்கும், அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல், எந்த ஒரு அர்ப்பணிப்பும் இல்லாமல், எந்தக் களப்பணிக்கும் செல்லாமல் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் பாஜக அரசு.
400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக, எதற்காக காங்கிரசுக் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறது. திருட்டும், புரட்டும் ஒரு நாள் விடியும். நீண்ட நெடிய நாட்கள் ஏமாற்ற முடியாது. பிரதமர் மோடிக்கு அரசியலில் இருந்து விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர். மோடிக்கு இதுதான் கடைசி ஆட்சி. வரும் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.