அதிமுக நிறுத்தி வைத்த விருது – எதிரிகளை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்

இந்திய ஒன்றியத்தின் 75 ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.இரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதில் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முகம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்….

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது சுபேர், த/பெ. முகமது ரபீக் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

முகமது ஜூபேர் ஆல்ட் நியூஸ் என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவரது இந்தப் பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய காணொளிக் காட்சிகளின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது ஆல்ட் நியூஸ் இணையதளம் மூலம் தெரியப்படுத்தினார்

எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகம்மது சுபைர்,

தமிழ்நாடு அரசிடம் இருந்து மதநல்லிணக்க விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்து இத்தகைய விருது கிடைப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

மத நல்லிணக்கத்திற்காகச் சேவையாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு ரூ.25,000-க்கான காசோலையும் சான்றிதழும் வழங்கப்படும்.

யாரிந்த கோட்டை அமீர்? அவர் பெயரால் விருது எதற்கு?

கோவையில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கோட்டை அமீர். பிறப்பால் இஸ்லாமியர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்துக்காக வாழ்ந்தவர். நாட்டையே அதிரவைத்த பாபர் மசூதி சம்பவத்தின்போது, தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமலும் மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து – முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்த அமைதிக் குழு அமைத்து, அதற்கு அவரே தலைவராகவும் இருந்தார். மசூதி மட்டுமல்ல, இந்துக் கோயில்களிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும்கூட அமீருக்கு நல்ல மரியாதை இருந்தது.

இது பிடிக்காத சிலர், 1994 ஆம் ஆண்டு அவரைக் கொடூரமாகக் கொலைசெய்தனர். இதையடுத்து, கோட்டை அமீரின் பெயரில், “ஒவ்வோர் ஆண்டும் விருது வழங்கப்படும்” என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி, 2001 ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், சமூக ஆர்வலர்களைத் தேடித்தேடி, ஒரு பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க ஆட்சியில் வெளியிட்ட அறிவிப்புகளை வேரோடு பிடுங்கி எறியும் ஜெயலலிதா ஆட்சியில்கூட, கோட்டை அமீர் பெயரில் விருது தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால்,எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, கோட்டை அமீர் விருதை வழங்காமல் நிறுத்தி வைத்தது.

இப்போது அந்த விருதை முகம்மது சுபைருக்குக் கொடுத்து எதிரிகளை அலறவிட்டிருக்க்கிறார் மு.க.ஸ்டாலின் என்கிற கருத்துகள் பரவலாக வருகின்றன.

Leave a Response