தடைசெய்யப்பட்ட தொழில்நுட்பம் மூலம் 41 தொழிலாளர்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி, சில்க்யாரா பகுதியில் சார்தாம் யாத்திரை நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் 4.5 கிமீ நீளத்துக்குச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது.2023 நவம்பர் 12 ஆம் தேதி இப்பணியின் போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் சுரங்கத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுமார் 60 மீட்டர் தூரத்திற்கு சுரங்கத்திற்குள் கட்டுமான இடிபாடுகள் விழுந்தன. இவற்றை அகற்றி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஓஎன்ஜிசி, பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை நிபுணர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக, 6 அங்குல குழாயை இடிபாடுகள் வழியாக உள்ளே செலுத்தி தொழிலாளர்களுக்கு உணவு, மருந்து வழங்கப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் சுரங்கத்தில் நலமுடன் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகர் கனரக இயந்திரம் கொண்டு, சுரங்க இடிபாடுகளில் கிடைமட்டமாக 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு, 800 மிமீ அகல இரும்புக் குழாய் செலுத்தி அதன் வழியாகத் தொழிலாளர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 46.8 மீட்டர் தூரம் வரை துளையிட்ட நிலையில், ஆகர் இயந்திரத்தின் பிளேடு உடைந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு, உடைந்த பிளேடு வெளியில் எடுக்கப்பட்டது.

மீதமுள்ள பகுதியை ‘எலி வளை’ சுரங்க நுட்பத்துடன் கைக்கருவிகளால் துளையிட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, 12 எலிவளை தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நேற்று முன்தினம் இப்பணி தொடங்கியது. அதே சமயம், மாற்று ஏற்பாடாக சுரங்கத்தின் மேல் பகுதியில் 80 மீட்டர் தூரத்திற்கு செங்குத்தாகத் துளையிடும் பணியும் நடந்து வந்தது.

இந்நிலையில், மீட்புப்பணியின் 17 ஆவது நாளாக நேற்று, எலி வளை துளையிடும் பணியில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடிபாடுகளில் 12 மீட்டர் தூரத்திற்குத் துளையிடப்பட்டது. மொத்தம் 58 மீட்டர் துளையிடப்பட்ட நிலையில், பிற்பகல் 1.30 மணி அளவில் துளையிடும் பணி முடிந்ததாகவும் விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் பரவின. இதனால் செங்குத்தாகத் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது.

மாலை 4 மணி அளவில் பேட்டி அளித்த தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அதா, மேலும் 2 மீட்டர் தூரத்திற்குத் துளையிட வேண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்தப் பணிகள் இரவு 7.45 மணி அளவில் முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் 800 மிமீ அகல இரும்பு குழாய் வழியாக உள்ளே சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களாக அவர்கள் உள்ளேயிருந்து மீட்டு அழைத்து வந்தனர். முதல் தொழிலாளியை இரவு 8 மணி அளவில் வெளியில் அழைத்து வந்தனர். உடனே அங்கிருந்த அனைவரும் கைதட்டி உற்சாகத்தை வெளிக்காட்டினர். இதன் பின் அடுத்தடுத்து ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். சுமார் 45 நிமிடத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் மூலம் 17 நாட்களாக தொழிலாளர்களுக்காக வெளியில் காத்திருந்த அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இனிப்புகளை பரிமாறி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இது மீட்புப்பணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மீட்கப்பட்ட தொழிலாளர்களும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டது குறித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக நிலக்கரிச் சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டி எடுக்க ஒரே ஒரு நபர் மட்டுமே நுழையக் கூடிய அளவுக்குக் குறுகலான சிறிய துளையிடுவதுதான் எலி வளை சுரங்கம். இத்தகைய எலி வளை சுரங்க நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரி எடுப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2014 இல் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்த நுட்பம் இன்னமும் சுரங்கப் பணிகளில் சத்தமின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் கூறுகையில், ‘‘எலி வளை சுரங்க நுட்பம் சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் 41 உயிர்களைக் காப்பாற்ற அந்த நிபுணர்களின் திறமை, அனுபவத்தை நாங்கள் பயன்படுத்தி உள்ளோம்’’ என்றார். சில்க்யாரா சுரங்கத்தில் எலி வளை சுரங்கம் மூலம் 41 தொழிலாளர்களை மீட்டவர்கள் டெல்லி, ஜான்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை இந்த சுரங்கப்பாதையைக் கட்டும் நிறுவனமான நவயுகா இன்ஜினியர்ஸ் அழைத்து வந்துள்ளது.

சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொடக்கத்தில் இருந்தே அதிகளவிலான தமிழர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் முதல் தொழிலாளர் மீட்கப்பட்டார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை மீட்புக் குழுவில் இருந்த பொறியாளர் சந்திரன் என்ற தமிழர் முதலாவதாக உலகிற்கு அறிவித்தார். அவரது பேட்டி உலககெங்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

சுரங்கத் தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்கும் முயற்சியில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோ டெக் நிறுவனத்தின் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களது முயற்சியினால் தான் தொழிலாளர்கள் பத்திரமாக இருப்பது எண்டாஸ்கோபி கேமரா மூலம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ரிக் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான பிஆர்டி நிறுவனம் தயாரித்த ஜிடி-5 என்ற நவீன ரிக் பயன்படுத்தப்பட்டது. இது தவிர மீட்புப் பணியில் 40 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் சண்முகம் என்பவர் ஆகர் இயந்திரத்தை இயக்கும் பிரிவின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்தார்.

Leave a Response