ஆளுநரைத் துவைத்துத் தொங்கப் போட்ட முதலமைச்சர் – 19 பக்கக் கடித விவரம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் இது தொடர்பாக தனது 10-1-2023 நாளிட்ட கடிதத்தினை 12-1-2023 அன்று டெல்லியில், தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்ததை நினைவுகூர்வதாகவும், அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

19 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தின் முழு விவரம்…….

ஆளுநர் என்பவர், முக்கியமான அரசியலமைப்பு கடமைகளைச் செய்பவராகவும், பாரபட்சமற்றவராகவும், அப்பழுக்கற்ற நேர்மையான நபராகவும் இருக்க வேண்டும். மக்களாட்சித் தத்துவம் என்பது நமது அரசியல் சாசனத்தின் உயிர்நாடி என்றும், அந்த மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை நிறுவுவதற்காகவே, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காலனிய சக்திகளை எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

அரசியல் சாசனத்தின் மீதும், அது பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் மீதும் ஆளுநருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அரசியலமைப்பின் இலட்சியங்கள் முகவுரையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, சோசலிச, மதச்சார்பற்ற, சனநாயக குடியரசு நாடு. இந்த அடிப்படைக் கொள்கைகளில் ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்புப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர்.

அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கை, செயல்பாடுகள், முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் நோக்கமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைக்கு ஆளுநர் வெளிப்படையாக முரண்படுவது அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் செய்து முட்டுக்கட்டை போடுவது அல்லது கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகச் செயல்படுவது போன்றதொரு சூழ்நிலையை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டை சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தமிழ்நாடு மக்கள் தங்களது உறுதியான ஆதரவை வழங்கி தேர்ந்தெடுத்துள்ளதை குடியரசுத் தலைவர் நன்கு அறிவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறோம்.

ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி வெளிப்படையாகத் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, தமிழ்நாடு அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையில்லாமல் காலதாமதம் செய்து வருகிறார்.

இதற்கு முன்பு நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். இரவி பொறுப்பு வகித்தபோதும் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. உண்மையில் நாகாலாந்து ஆளுநர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகுதான் நாகாலாந்திற்கு ஒரு நிம்மதி ஏற்பட்டுள்ளதாக, நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி) தலைவர் கூறியுள்ளார். சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தைக் கலந்தாலோசிக்காமல், அதற்கு இணையாக, மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவுகளை திரு. ஆர்.என்.இரவி வழங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விவகாரங்களில் தலையிட்டதாக என்.டி.பி.பி தலைவர் சிங்வாங் கொன்யாக் தெரிவித்தார்.

ஆளுநரின் இத்தகைய செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பரவலான கண்டனத்தைத் தெரிவித்தனர். இந்தப் பின்னணியில்தான், ஆர்.என்.இரவி 2021-செப்டம்பரில் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றது முதல், சட்டபூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி பல்வேறுயின் நடவடிக்கைகள், அவர் ஆளுநர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதைப் புலப்படுத்துகின்றன.

சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் தேவையற்ற காலதாமதம்:

தமிழ்நாடு சட்டமன்றம் பல முக்கியமான சட்டமுன்வடிவுகளை இயற்றி அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இது மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கும், சட்டமன்றத்தின் அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானதாகும். ஆளுநரின் இத்தகைய செயல், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் மக்களுக்குச் சேவை செய்வதைத் தடுக்கிறது. இது அரசியலமைப்பிற்கு முரணானது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தின் முடிவின் மீது, ஒரு ஆளுநர் மேல்முறையீட்டு அதிகாரியாக இருக்க முடியாது. சட்டமுன்வடிவின் நோக்கக் காரணம், தேவை மற்றும் சட்டமுன்வடிவின் அவசியம் குறித்து ஆளுநர் விசாரிக்க முடியாது. இது சட்டமுன்வடிவின் அவசியத்தை விரிவாக விவாதிக்கும் சட்டமன்றத்தின் முழு உரிமைக்கு உட்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் அது மக்களின் விருப்பமாகக் கருதப்பட்டு, ஆளுநர் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும். சட்டமுன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம்:

ஊழல் புரிந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஆர்.என். இரவி கிடப்பில் போட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர சிபிஐ கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது விசித்திரமாக உள்ளது. ஆளுநரின் ஒப்புதலுக்காக ஊழல் வழக்குகள் தொடர்பான பின்வரும் கோப்புகள் நிலுவையில் உள்ளன.

● திரு.பி.வி.ரமணா @ பி.வெங்கட்ரமணா – முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.

● டாக்டர் சி. விஜயபாஸ்கர் – முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் – கோப்பு எண் AC/495/2022, நாள் 12.9.2022.

● திரு. கே.சி. வீரமணி – முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் – கோப்பு எண் AC/454/2021, நாள் 12.9.2022.

● திரு. எம்.ஆர்.விஜயபாஸ்கர் – முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் –கோப்பு எண் AC/351/2021, நாள் 15.5.2023.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக செயல்படுதல்: ஆர்.என்.இரவி தனிப்பட்ட முறையில், தனது அரசியல் மற்றும் மதக் கருத்துகளைத் தொடர்ந்து பொது வெளியில் தெரிவித்து வருவது, அவர் வகிக்கும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமற்றது. ஒரு மாநில ஆளுநராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயல்கிறார்.

அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழும் பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சொர்க்கம் போன்றது. மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் மாநில அரசு தனது முழு நம்பிக்கையைக் கொண்டுள்ளது. கெடுவாய்ப்பாக, ஆர்.என். இரவி, இந்த நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.

ஆர்.என்.இரவி, விரும்பத்தகாத, பிளவுபடுத்தும், மதரீதியான கருத்துகளைப் பொதுவெளியில் பரப்பி வருவது அவரது ஆளுநர் பதவிக்குப் பொருத்தமற்றது. 9-11-2022 அன்று ஆர்.என். இரவி, “உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது” என்று ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். இந்தியா, அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்துள்ளதையும், எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதை குடியரசுத் தலைவர் நன்கு அறிவார்கள்.

இந்தியாவின் வலிமையும், அழகும், அதன் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட சமூகத்திலும், பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மத நல்லிணக்கத்திலும் உள்ளது. 13.06.2022 அன்று ஆர்.என்.இரவி சனாதன தர்மத்தைப் புகழ்வது, தமிழ் இலக்கியத்தின் இரத்தினமான ‘திருக்குறளை’ வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாதக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற தேவையற்ற அறிக்கைகள் மற்றம் பேச்சுக்களின் மூலமாக ஆளுநர் ஆர்.என். இரவி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். இரவி, தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார். அவர் மக்களின் தலைவர் அல்ல; நியமனம் செய்யப்பட்ட ஒரு நிர்வாகி. 5-1-2023 அன்று நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் என்ற விழாவில், மீண்டும் தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு செய்தித்தாளில் வெளிவந்தன.

● “துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தில், நாங்கள் திராவிடர்கள், எங்களுக்கும் இதற்கும் (பாரதம்) எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிற்போக்குத்தனமான அரசியல் நடந்து வருகிறது -”.

● “அதனால்தான் கூட்டாட்சி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் இங்கே இருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை”.

● “மாகாணங்கள் என்ற கருத்தாக்கம் நிர்வாக நோக்கங்களுக்காக உள்ளது. எனவே, நமது ஒன்றியம் அமெரிக்காவைப் போலன்றி இயற்கையானது; கருத்தியல் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்”

● “இங்கே தமிழகத்தில் ஒரு வித்தியாசமான கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது; நாடு முழுமைக்கும் பொருந்தும் அனைத்தையும் தமிழகம் மட்டும், ‘இல்லை, நாங்கள் உடன்படவில்லை’ என்று சொல்லும். இது ஒரு பழக்கமாகிவிட்டது, கல்விப்புலம் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இந்தப் பழக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது”.

● “மிகவும் மோசமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளன. இது உடைக்கப்பட வேண்டும், உண்மை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்று, பாரதத்தின் ஓர் அங்கம் என்பதே அந்த உண்மை”.

திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என். இரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட அரசு மற்றும் அரசியலின் விளைவாகவே, இன்றைக்கு வளர்ச்சியில் இந்திய அளவில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சியும், சமூகநீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டில், தேசிய சராசரியான 60.19-க்கு எதிராக, தமிழ்நாடு 63.33 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

திராவிட அரசியல் பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்பதை நடுநிலையாளர்களால் இந்தத் தரவுகளைக் கொண்டு கணிக்க முடியும். தமிழ்நாட்டில், தொடர்ந்து திராவிட ஆட்சி நடப்பதால்தான் பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரத்தில், தமிழ்நாடு 38,837 தொழிற்சாலைகளுடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் 28,479 தொழிற்சாலைகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில், ரூ.13,641 கோடியாக இருந்த மின்னணு ஏற்றுமதி, கடந்த 2 ஆண்டுகளில் 223 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சியைப் பதிவு செய்து, 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.44,044 கோடியாக உயர்ந்து, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று சொல்பவர்களின் பார்வையில்தான் குறைபாடு உள்ளது. ஆளுநர் என்ற அரசியலமைப்புப் பதவியை வகிக்கும் ஒரு நபரின் பொருத்தமற்ற அரசியல் போக்கையே இது அம்பலப்படுத்துகிறது. அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய அங்கமான கூட்டாட்சித் தத்துவம், நிர்வாக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என். இரவி விமர்சித்து, அவதூறாகப் பேசியிருப்பதுதான் அதைவிட அதிர்ச்சியளிக்கும் விசயம். கூட்டாட்சி என்பது நிர்வாக நோக்கங்களுக்காக உருவாக்கப்படவில்லை; மாறாக அரசியலமைப்பின்கீழ் இந்தியா இவ்வாறாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 1-இல் இந்தியாவை “மாநிலங்களின் ஒன்றியம்” என்று வரையறுக்கிறது; இதன் மூலம் மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒன்றியத்தை உருவாக்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.இரவி “இலக்கியம் மக்களுக்கு மோசமாகப் போதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து தமிழ் இலக்கியத்தை இழிவுபடுத்தியுள்ளார். இதுபோன்ற அவரது அறிக்கைகள் அரசியலமைப்பை அவமதிக்கும் வகையில் உள்ளன. அவரது இதுபோன்ற செயல்கள், இந்திய அரசமைப்பின் 156 (1)-ஆவது பிரிவின்கீழ், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், இணங்குவதற்கும் தான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளதையே காட்டுகிறது.

மேற்கூறியவற்றைத் தவிர, ஆர்.என். இரவி, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் “தமிழ்நாடு” என்ற பெயரை, “தமிழகம்” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் தெரிவித்தார். ஆளுநரின் இந்தச் செயல் தமிழ்நாட்டின் மீது அவருக்குள்ள அதீத வெறுப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளதோடு, திராவிடத்தின் அடையாளமும், முன்னாள் முதல்வரும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் அடையாளமாகத் திகழ்பவருமான பேரறிஞர் அண்ணாவால் ‘தமிழ்நாடு’ எனச் சூட்டப்பட்ட பெயரைக் களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஆர்.என். இரவி தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்கமுடியாத, ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது. ஆளுநர் ஆர்.என். இரவி மேலே விவரிக்கப்பட்ட சொற்களும், பேச்சுகளும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைச் செயல்படவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அதிருப்தியையும் அவர் தூண்டுகிறார் என்பதையே காட்டுகிறது

9-1-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது ஆர்.என். இரவியின் எதேச்சதிகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரிவு 163(1)-இன்படி, ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் தன்னிச்சையாகவோ, தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவோ செயல்பட முடியாது. இருப்பினும்,
9-1-2023 அன்று, ஆர்.என்.இரவி, அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முற்றிலுமாக மீறும் வகையில், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, 7.1.2023 அன்று தான் ஒப்புதல் அளித்த உரைப் பகுதியை வாசிக்காமல், திருத்தப்பட்ட பதிப்பை வாசித்தார். இதன்மூலம், அவருடைய அரசியல் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது.

வரைவு உரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘சமூகநீதி’, ‘சுயமரியாதை’, ‘அனைவருக்குமான வளர்ச்சி’, ‘சமத்துவம்’, ‘பெண்ணுரிமை’, ‘மதநல்லிணக்கம்’, ‘மனிதநேயம்’ மற்றும் ‘திராவிட மாடல் ஆட்சி’ போன்ற சொற்களை அவர் வாசிக்காமல் புறக்கணித்தார். ஒருவேளை இவற்றில் எல்லாம் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர் அவற்றைப் புறக்கணித்திருக்கலாம். அதோடு, ‘தந்தை பெரியார்’, ‘அம்பேத்கர்’, ‘பெருந்தலைவர் காமராஜர்’, ‘பேரறிஞர் அண்ணா’, ‘கலைஞர் மு.கருணாநிதி’ போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதையும் ஆளுநர் தவிர்த்தார்.

இதன்மூலம், மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை ஆளுநர் பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கி உள்ளார். இந்தியாவின் இத்தகைய மகத்தான தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்தது, தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும். அதோடு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட வரைவு உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில்கூட, இதுபோன்ற வாக்கியங்களைப் படிக்காமல் தவிர்த்தது அதிர்ச்சியளிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, பொதுவெளியில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதாக இல்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டை மேம்படுத்தவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும் கிழக்காசிய நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஆளுநர் ஆர்.என்.இரவி, வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று சீண்டுவதுபோல குறிப்பிட்டார். ஆர்.என்.இரவி, அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட கண்ணியமான ஆளுநராகச் செயல்படுவதை விட, மலிவான அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெளிவாகியுள்ளது.

குற்றவாளிகளை ஆதரித்தல் மற்றும் காவல்துறை விசாரணையில் தலையிடுதல்:

இவை தவிர, கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என்.இரவி ஆதாரமற்ற மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், சிதம்பரம் நடராசர் கோயிலைச் சார்ந்த இரண்டு தீட்சிதர்கள், குழந்தைத் திருமணப் புகார்களைத் தொடர்ந்து சிதம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (ஏ) மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006-இன்கீழ் நான்கு வழக்குகள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 ஆண்கள், 3 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மே 4 ஆம் தேதி, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்குப் பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என். இரவி, சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என்றும், பழிவாங்கும் நோக்கில் நடராசர் கோயில் தீட்சிதர்கள் மீது மாநில அரசின் சமூக நலத்துறை 8 பொய்யான புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியியுள்ளார். மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆளுநரின் இத்தகைய அறிக்கை, விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், காவல்துறையினரின் நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருந்தது. இது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

பின்னர், சிறுமிகளின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி, ஆர்.என்.இரவி தனது பேட்டியில் கூறிய கருத்துகள் பொய்யானவை என்பது தெரியவந்தது. தீட்சிதர்களின் மகள்களான 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவிகளை வலுக்கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அரசு மருத்துவர்கள், தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், இதன் காரணமாக சில பெண் குழந்தைகள் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆளுநர் ஆர்.என். இரவி தனது பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். ஆளுநரின் இந்தக் கருத்துகள் தவறானவை என்று பின்னர் கண்டறியப்பட்டன.

இதுபோன்ற கருத்துகளைக் குற்றவியல் விசாரணைக்கு இடையூறாகவும், சாட்சியங்களைச் சிதைக்கும் வகையிலும் ஒரு சாதாரண நபர் வெளியிட்டிருந்தால், அந்த நபர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், காவல்துறையினர் நிச்சயம் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள். குழந்தைத் திருமணம் என்ற கொடிய குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையில், கருத்துத் தெரிவிப்பதை நல்ல மனசாட்சி உள்ள யாராலும் அனுமதிக்கமுடியாது.

ஒரு கடுமையான அரசியலமைப்பு மீறல்:

15-6-2023 அன்று, எனது அமைச்சரவை சகாக்களில் ஒருவரான வி.செந்தில்பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை எனது அமைச்சரவையில் உள்ள வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பி, செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்பி, இலாகா மாற்றம் தொடர்பான கடிதம் 15.6.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு 16.6.2023 அன்று ஆளுநர் எனக்குக் கடிதம் எழுதினார். அதில் செந்தில்பாலாஜி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார் என்பதால், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என்ற எனது பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்தார். ஆளுநரிடமிருந்து மேற்கண்ட கடிதம் கிடைத்ததும், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பான எனது பரிந்துரையை வலியுறுத்தி அன்றே பதில் அனுப்பினேன். அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் ஆளுநர் ஆர்.என். இரவி செயல்படுகிறார் என்பதையே இச்செயல்கள் காட்டுகின்றன.

இது ஒருபுறமிருக்க, முன்னதாக 31-5-2023 அன்று வி.செந்தில்பாலாஜி மீதான “கிரிமினல் நடவடிக்கைகள்” அவருக்கு சாதகமாக முடிவடையும் வரை, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஆளுநர் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு உடனே 1.6.2023 தேதியிட்ட ஒரு கடிதத்தை நான் எழுதினேன். அக்கடிதத்தில் சட்டப்படி, ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறார் அல்லது ஒரு விசாரணை அமைப்பால் விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகமாட்டார் என்பதை விரிவாக விளக்கினேன்.

அந்த வகையில், (1) விசாரணையை எதிர்கொள்ளும் நபர், (2) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மற்றும் (3) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட நபர் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை நான் குறிப்பிட்டேன். லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் (2013) பிரிவு 7, உட்பிரிவு 653 என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்று சுட்டிக்காட்டினேன். ஒரு அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆளுநரின் இத்தகைய பரிந்துரை சட்டவிரோதமானது என்றும் கடிதம் மூலம் ஆளுநருக்குத் தெரிவித்தேன்.

இந்தச் சூழ்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், 29.6.2023 அன்று இரவு 7:45 மணியளவில் ஆளுநர் ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பினார். அதில், இந்திய அரசியலமைப்பின் 154, 163 மற்றும் 164- ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆளுநரின் அந்தக் கடிதத்துக்குப் பதில் அளிப்பது தொடர்பாக நான் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அன்றிரவு 11:45 மணிக்கு, 29.6.2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதத்தை “நிறுத்திவைக்கும்” மற்றொரு கடிதம் ஆளுநரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. அந்த இரண்டாவது கடிதத்தில், இந்தியத் தலைமை வழக்கறிஞரின் கருத்தைப் பெறுமாறு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் தெரிவித்து இருந்தார்.

இப்பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் பரவலாக விவாதங்கள் எழுந்தன. அனைத்து முன்னணி நாளிதழ்களும் தங்கள் தலையங்கங்களில் ஆளுநர் ஆர்.என்.இரவியின் முறையற்ற செயல்பாட்டைக் கண்டித்துக் கடுமையாக விமர்சித்திருந்தன. தனது இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை ஆளுநர் ஆர்.என். இரவி சிறுமைப்படுத்தியுள்ளார்.

ஆளுநரின் 29-6-2023 தேதியிட்ட இந்த இரண்டு கடிதங்களுக்கும், நான் 30.6.2023 அன்று அனுப்பிய கடிதத்தில், “சட்டப்பிரிவு 164 (1)-இன்கீழ், முதல்வரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார் மற்றும் நீக்குகிறார். அந்த வகையில் அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” என்பதை மீண்டும் வலியுறுத்தினேன். 29-6-2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதங்கள், அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான் அவற்றைப் புறக்கணித்தேன்.

ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு வெறுப்புகள், கட்சி அரசியல் அல்லது எதிர்கால நியமனங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அற்றவராக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை நீங்கள்(குடியரசுத் தலைவர்) ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். ஆளுநர் அலுவலகம் என்பது அரசியல் சார்பற்றதாகவும், ஆளுநர் தனது செயல்பாட்டிலும், பார்வையிலும், உண்மையாகவும் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். ஒரு நல்ல ஆளுநர் தன்னைப் பற்றிய ஒரு உயர்வான கருத்தை அரசாங்கத்திற்குள்ளும், மாநில மக்கள் மத்தியிலும் உருவாக்க வேண்டும். அவர் மாநில மக்கள் மீதும், திறமையான நிர்வாகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். ஏதோ ஒரு கட்சி அல்லது கருத்தியலின் நலனை வளர்ப்பதற்காக ஆளுநர் செயல்படக் கூடாது. அவர் மாநிலத்தின் நலனுக்காகத் தனது அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி, அரசியலமைப்புக் குறிக்கோள்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

மததிய ஆளும் கட்சியை எதிர்க்கும் ஒரு கட்சியின் கைகளில் மாநில ஆட்சி இருக்கும்போது, மாநிலத் தலைநகர்களில் அமர்ந்துகொண்டு, அந்த மாநில அரசை கவிழ்க்கும் வாய்ப்பைத் தேடும் ஆளுநரை வெறும் மத்திய அரசின் முகவராகத்தான் கருதமுடியும். ஆளுநரின் இத்தகைய செயல் நமது கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்து, இழிவுபடுத்தி, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையே அழித்துவிடும். தமிழக ஆளுநர்
ஆர்.என். இரவி, இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டு மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என்.இரவி மீறியுள்ளார் என்பது தெளிவாகிறது. அவர் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிட்டு, மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது வழக்கு தொடர சிபிஐ வேண்டுகோள் விடுத்தும், அதற்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதோடு, எனது அமைச்சர் ஒருவர் மீது வழக்கு விசாரணை தற்போது தொடங்கியுள்ள நிலையில், அவரை “டிஸ்மிஸ்” செய்ய அவசர கதியில் செயல்படுவதன் மூலம் தனது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்.என். இரவி, தனது நடத்தை மற்றும் செயல்பாடுகள்மூலம், தான் ஒருதலைப்பட்சமானவர் மற்றும் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் உயர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு தகுதியானவர். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 156(1)-இல், குடியரசுத் தலைவர் விரும்பும் காலம் வரை ஆளுநர் பதவியில் இருப்பார் என்று உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், தமிழ்நாடு அரசின் நலன் கருதியும் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து உண்மைகளையும் குடியரசுத் தலைவரின் கனிவான பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

நமது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோர்களின் உணர்வையும், மாண்புகளையும் பாதுகாக்கும் வகையில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்புப் பதவியில் ஆர்.என். இரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response