உடனடியாக நடைமுறைக்கு வந்தது தடைச்சட்டம் – தண்டனைகள் விவரம்

தமிழ்நாட்டில் ஏராளமானோர் இணையதளச் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால்,அதற்குத்தடைவிதிக்க தமிழ்நாடு அரசு சட்டமியற்றியது.அச்சட்டத்துக்கு சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மாதம் 8 ஆம் தேதி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.

அதற்கான காரணம் குறித்து ஆளுநர் அளித்த விளக்கத்தில், “இணையதளச் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 23 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் இணையதளச் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை மு.க.ஸ்டாலின் மீண்டும் பேரவையில் தாக்கல் செய்தார்.

24 ஆம் தேதியன்று அதாவது மறுநாளே இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு மீண்டும் அனுப்பிவைத்தது. இந்த முறையாவது சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிடுவார் என்று தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக நேற்று காலை அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளான நிலையில் இணையதளச் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆர்.என். ரவி நேற்று மாலை ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில்,இணையதளச் சூதாட்டத் தடைச் சட்டம் இன்று தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உடனடியாக அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆகவே இனிமேல் தமிழ்நாட்டில், இணையதளச் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து இணையதள விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இணையதளச் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 இலட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 இலட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Response