எஸ்விஆருக்கு அம்பேத்கர் விருது – மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க உத்தரவிட்டார் கலைஞர் மு.கருணாநிதி. மேலும், சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கியதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவினார். கலைஞரின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

கலைஞர் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தியது,

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை சி.நா.மீ.உபயதுல்லாவுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருதினை நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தாவுக்கும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா.மதிவாணனுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்த விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.2 இலட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை எஸ்.வி. ராஜதுரைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இந்த விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.5 இலட்சம், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், த.வேலு, பரந்தாமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Response