சிங்கள மக்கள் மீது இராணுவம் கொடூர தாக்குதல் – ஐநா மனித உரிமை அமைப்பு கண்டனம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் கொழும்புவில் மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கினர். இந்தப் போராட்டம் 100 நாட்களைக் கடந்த நிலையிலும், தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் கூடாரம் அமைத்துத் தங்கியபடி அவர்கள் போராட்டத்தை அமைதியான முறையில் தொடர்ந்து வந்தனர்.

அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டமக்கள், பிரதமர் வீடு, அலுவலகம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கடந்த 9 ஆம் தேதி முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.

நிலைமை மோசமானதால், கோத்தபய தனது குடும்பத்துடன் அதிபர் மாளிகையில் இருந்து மாலத்தீவுக்குத் தப்பினார். அங்கும் மக்கள் அவரை விரட்டி அடிக்கவே, மறுநாள் இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் போய்ச் சேர்ந்தார். பின்னர், ஏற்கனவே அறிவித்தப்படி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, ஜூலை 20 ஆம் தேதி புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் நடந்தது. இதில், அதிக வாக்குகள் பெற்ற ரணில் வெற்றி பெற்றார். இதன்மூலம், நாட்டின் 9 ஆவது அதிபராக நேற்று முன்தினம் அவர் பதவியேற்றார்.

ஆனால், அவரை உடனடியாகப் பதவியில் இருந்து விலகும்படி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிபர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவைத் துரத்தும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் நடைபெற்று வரும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தை ஒடுக்குவது குறித்து பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளுடன் ரணில் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை நடைபெற்ற சில மணி நேரங்களில் நாடு முழுவதும் பொது அமைதியை ஏற்படுத்தும்படி இராணுவத்தின் முப்படைகளுக்கும் அதிகாரப்பூர்வமான சிறப்பு உத்தரவை அதிபர் ரணில் பிறப்பித்தார். மேலும், `மக்கள் போராட்டத்தை கைவிட்டு அதிபர், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள், பிரதமர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டு, தங்களின் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். அரசு கட்டிடங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிபர் என்ற முறையில் அமைதியாகப் போராட ஒத்துழைப்பேன். ஆனால், அமைதியான போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்,’ என்று எச்சரித்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் காலி முகத்திடலில் களம் இறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்குத் திடீரென சென்ற இராணுவத்தினர் அங்கிருந்த போராட்டகார்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியான தாக்குதல் நடத்தினர். அவர்களின் கூடாரங்களைப் பிடுங்கி எறிந்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை இழுத்துச் சென்றனர். இவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல்களை படம் பிடித்த செய்தியாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதில், கைதானவர்கள், அதிபர் மாளிகையில் தங்கி இருந்தவர்கள் குறித்த ஆதாரங்களை சிசிடிவி. பதிவு மூலம் திரட்டுவதில் இராணுவம் தீவிரமாக உள்ளது. அதே நேரம், அதிபர் மாளிகை, அலுவலகம் பகுதிளில் இருந்து விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள், இராணுவத்தின் நடவடிக்கையைக் கண்டித்து வேறு இடங்களில் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இதனால், தலைநகர் கொழும்பு உள்பட இலங்கையின் முக்கிய நகரங்களில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் கொழும்பில் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐநா மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு கூறியிருப்பதன் சாராம்சம்…

கொழும்பில் அதிபர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட முகாமை உடைப்பதற்குப் பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தை பிரயோகித்தமையால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம். போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறோம்

இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

Leave a Response