தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முழு விவரம் வருமாறு……
இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 6 ஆயிரத்து 277 பேர். இதில் மாணவியர் 4 இலட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 655.
இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 இலட்சத்து 55 ஆயிரத்து 998. கிட்டத்தட்ட 93.76 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள், 4 இலட்சத்து 6 ஆயிரத்து 105 – 96.32 விழுக்காடு. மாணவர்கள் 3 இலட்சத்து 49 ஆயிரத்து 893 – 90.96 விழுக்காடு.
மாணவர்களைவிட மாணவிகள் 5.36 விழுக்காடு அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2 ஆவது இடம் பிடித்துள்ளது. 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இராமநாதபுரம் மாவட்டம் 3 ஆவது இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டன.
இதில் தேர்வெழுதிய 9 இலட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 இலட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, 6,016 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் தேர்ச்சி பெற்றனர். சிறைக் கைதிகளில் தேர்வு எழுதிய 242 பேரில், 133 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்வு எழுதத் தகுதி பெற்று இருந்தவர்களில் 42,519 பேர் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டை விட 22,000 அதிகம் ஆகும். 2019 ஆம் ஆண்டில் 20,053 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ்ப் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 2186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 12,714 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 விழுக்காடு. அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 விழுக்காடும், தனியார் பள்ளிகள் 98.31 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 90.37 விழுக்காடும், ஆண்கள் பள்ளிகளில் 79.33 விழுக்காடும், பெண்கள் பள்ளிகள் 93.80 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 4,006 பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 886 ஆகும்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 2 ஆம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பிடித்து உள்ளது.