கலைஞர் சிலை திறப்புவிழா – பாஜகவுக்கு எதிராகப் பேசிய வெங்கையாநாயுடு

தமிழகத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிக்கு கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் மு.கருணாநிதிக்கு ரூ.1.70 கோடி செலவில் 16 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்பு விழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சிலையைத் திறந்துவைத்தார். அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதியின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதன் பின்னர் அருகில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவின் தொடர் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

தி.மு.க. பொதுச்செயலாளரும்,நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வரவேற்றுப் பேசினார்.

அதன் பின்னர், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மு.கருணாநிதியின் மார்பளவு சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார்.

அதற்கு அடுத்து,கலைஞர் மு.கருணாநிதி பற்றிய 12 நிமிடங்கள் ஓடும் சிறப்புக் காணொலித் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து விழாவுக்குத் தலைமை தாங்கிய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதையடுத்து குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விழாப் பேருரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது….

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலையைத் திறந்து வைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையிலேயே அவர் இந்தியாவின் மிகுந்த சக்தி வாய்ந்த முதலமைச்சர்களுள் ஒருவராக இருந்தார். இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைமகனின் சிலையைத் திறந்து வைத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

கலைஞர் மு.கருணாநிதியின் சிலையைத் திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் என்னை அழைத்தபோது எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஒப்புக்கொண்டேன். நிலையான அரசாட்சி வழங்கிய ஒரு சிறந்த நிர்வாகி அவர்.

சிறந்த பேச்சாளர் எனது மாணவப்பருவத்தில் இருந்தே இராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். உள்பட முக்கிய தலைவர்களின் பேச்சுகளை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறேன். நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர். கொள்கைகளையும், யோசனைகளையும் அவர் சொன்ன விதம், அந்த இளம் வயதில் என்னை ஈர்த்தது. எனக்கென்று ஒரு அரசியல் கொள்கையும், அவரது கொள்கையில் இருந்து மாறுபாட்டை நான் கொண்டிருந்தாலும், அவரது கருத்துகளை மக்கள் மத்தியில் அவர் சேர்த்த விதம் என்னைக் கவர்ந்தது.

தமிழ்த் திரையுலகின் புதிய அத்தியாயத்தை எழுதியவர் கலைஞர். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குறள் கலைஞருக்குப் பொருந்தும். தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்த்தவர் கலைஞர். தமிழக அரசுக்கு நன்றி அவருடன் அரசியலில் இருந்தபோது நான் பேசியிருக்கிறேன். மக்களுக்காக அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, அதற்கான பணியில் இருந்த ஒழுக்கம் ஆகியவற்றை அறிந்திருக்கிறேன். இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தமிழக அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை எப்போதுமே எனக்கு அருமையான நகரமாகவும், எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பு நகரமாகவும் உள்ளது.

எனது நீண்ட பொது வாழ்க்கையில் பல தசாப்தங்களாக கலைஞருடன் நெருங்கிக் கலந்துரையாடிய நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றிருப்பவன் நான். அவர், பல திறமைகள் ஒருங்கே அமைந்தவராகத் திகழ்ந்தார். கூர்மதியுள்ள அரசியல்வாதியாக இருந்து, போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதுமட்டுமல்லாமல் அவரது கட்சியின் தலைமை பதவியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தார்.

பன்முக ஆளுமை தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையில் என்றும் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ள உண்மையான பன்முக ஆளுமை கொண்டவர் கலைஞர். வளர்ச்சி மற்றும் சமூக நலனின் மரபை நிலை நிறுத்திய முதலமைச்சராக அவர் திகழ்ந்தார். புத்திசாலித்தனம், இலக்கிய சுவை மற்றும் கற்றறிந்த வெளிப்பாடுகளோடு பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் தலைசிறந்த சொற்பொழிவாளராக கலைஞர் இருந்தார்.

ஆக்கப்பூர்வமான அரசியல் விவாதக் கலையில் சிறந்து விளங்கிய ஒப்பற்ற சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
கலை, கலாசாரம் மற்றும் இதழியலின் மீது கலைஞர் கொண்டிருந்த ஈடுபாட்டினாலும், 1948 ஆம் ஆண்டில் தூக்குமேடை என்ற அவரது சினிமா மிகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றதினாலும் அவருக்குக் கலைஞர் என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டது. தனது எழுத்து மற்றும் வசனங்களின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்துறையில் புதிய பாதையை கலைஞர் வகுத்தார். தி.மு.க.வின் வெளியீடான அவர் நிறுவிய முரசொலி பத்திரிகையில் எழுதிய விசாலமான கருத்துகளின் மூலம் சக்திவாய்ந்த எழுத்தாளராகவும் கலைஞர் விளங்கினார். அரசியல் சீர்திருத்தவாதி சிறந்த நிர்வாகி, சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், கவிஞர், திரைப்பட எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் என்ற நிலைகளில் இருந்த கலைஞரின் பணிகளில் பொதுவான கருத்து இருந்தால், அது சமூக சமத்துவமும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டதாகத்தான் இருக்கும்.

1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு, நமது நாட்டின் வளர்ச்சிப்பாதையை வடிவமைத்த மேன்மைவாய்ந்த பிரதமர்களையும், முதலமைச்சர்களையும் நாம் பெற்றிருந்தோம். மத்திய மற்றும் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதிலும், அரசியல் வடிவமைப்புகளை மேற்கொள்வதிலும், திட்டங்களை வகுப்பதிலும், நிறுவனங்களைக் கட்டி எழுப்புவதிலும் மிகுந்த முயற்சிகளை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த நிலையான முயற்சிகள்தான் நம் நாட்டை முன்னிலைப்பாதையில் கொண்டு செல்கிறது. கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்துத் தந்த பாதையால் வழிநடத்தப்பட்டு, இதுபோன்ற தலைவர்கள் நமது அரசியலமைப்பில் உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தத்தைக் கொண்டுவர பல்வேறு நிலைகளில் முயன்றுள்ளனர்.

நாட்டின் கூட்டாட்சித் தன்மைக்கு வலிமை சேர்த்த தலைவர்களுள் கலைஞரும் ஒருவர். இதுபோன்ற தலைவர்களுக்கு நன்றி. இந்த நடைமுறையால் வலுவான இந்தியாவை ‘டீம் இந்தியா’ என்று அழைக்கிறோம். தனித்துவம் வாய்ந்த திறன் மொழிவளம், இலக்கிய மற்றும் கலாசார பொக்கிசங்கள், தலைசிறந்த கட்டிடவியல், அபாரமான கைவினைத்திறன், அறிவியல், தொழில் மற்றும் வேளாண்மைச் சாதனைகள் போன்ற வளங்களால் துடிப்பான மற்றும் தனித்துவம் வாய்ந்த திறனை ஒவ்வொரு மாநிலமும் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்தி, இத்தகைய வியப்பூட்டும் பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ஒரு நாடாக நாம் வளர்ந்திருப்பதோடு, விவேகமான முன்னேற்றத்தையும் அடைந்துள்ளோம்.

மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், கலைஞரின் செயல்பாடுகளை வியப்போடு பார்த்துள்ளேன். மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது நாட்டின் சிறப்பு. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது. தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

தொலைநோக்குப் பார்வை ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் அபரிமிதமான சக்தியைத் தட்டி எழுப்புவதன் மூலம் அரிதான ஒருங்கிணைப்பை நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்துள்ளோம். கலைஞர் போன்ற தலைசிறந்த தலைவர்கள் இதைத்தான் செய்ய முயன்றார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும் வளர்ச்சி வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டிருந்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response