மாநிலங்களவை திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு – தமிழகத்தில் பிரியங்கா காந்தி போட்டி?

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என இந்திய ஒன்றியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டி.கே.எஸ் இளங்கோவன் (திமுக) , நவநீத கிருஷ்ணன் (அதிமுக),
ஆர்.எஸ்.பாரதி (திமுக), எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் (அதிமுக), ஏ.விஜயகுமார் (அதிமுக),
கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் (திமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகின்றன. இதன் காரணமாக 6 இடங்களுக்கும் ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகத் தஞ்சை சு. கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓர் இடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் உலவுகிறது.

Leave a Response