ஆரிய மேலாதிக்கம் அதிகாரத்திமிர் – தமிழக ஆளுநருக்கு சீமான் கடும் கண்டனம்

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென 2021 செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் அச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதாவை தமிழக ஆளுநர் அலுவலகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

நேற்று அதை நிராகரித்து தமிழக ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்….

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா; அந்த மசோதாவிற்கு அடிப்படையாக இருந்த, இந்த மாநில அரசினால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கை ஆகியவற்றை ஆளுநர் விரிவாக ஆய்வு செய்தார்.

மேலும், மருத்துவக் கல்வி சேர்க்கையில், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதில் நீட் தேர்விற்கு முந்தைய நிலையில் இருந்த சமூகநீதி பற்றியும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த மசோதா, மாணவர்களின் நலனுக்கு குறிப்பாக, ஊரகப் பகுதியைச் சேர்ந்த மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்துள்ளார்.

எனவே அந்த சட்ட மசோதாவை தமிழக சட்டசபை சபாநாயகருக்கு 1 ஆம் தேதியன்று திருப்பி அனுப்பிவிட்டார். அதோடு, அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான விரிவான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில், விரிவான ஆய்வை, அதிலும் சிறப்பாக சமூகநீதி தொடர்பான கோணத்தில் உசநீதிமன்றம் நடத்தியது. அதன் பிறகு, ஏழை மாணவர்களின் பொருளாதார சுரண்டலை தடுக்கக் கூடியது என்றும், சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும் நீட் தேர்வை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்தக் கடிதத்துக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..,

நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டவரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சியளிக்கிறது. எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைக்கோரிக்கையாக தமிழகச்சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குகோரும் சட்டவரைவை அங்கீகரிக்க மறுத்த ஆளுநரின் முடிவு பெரும் சனநாயகப்படுகொலையாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு மதிப்பளிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மாநிலத்தன்னாட்சிக்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும், இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்திற்குமெதிரான நீட் எனும் ஒற்றைத்தகுதித் தேர்விலிருந்து விலக்குகோரி, ஒட்டுமொத்த தமிழகமும் ஒற்றைப் பெருங்குரலெடுத்து போராடி வரும் நிலையில் ஆளுநரின் அறிவிப்பு தமிழர்களின் தன்மானத்தையும், இனமானத்தையும் உரசிப்பார்ப்பதாக உள்ளது.

ஆரிய மேலாதிக்கமும், அதிகாரத்திமிரும் கொண்டு தமிழர்கள் மீது கொடும் வன்மம் பாராட்டும் பாசிச பாஜகவின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு இனமானத்தமிழர்கள் தேர்தல் களங்களில் உறுதியாகப் பாடம் புகட்டுவார்கள் என்றுரைத்து, மொழிப்போருக்கும், ஏறு தழுவுதலெனும் பண்பாட்டு உரிமைக்குமாக வீதிக்கு வந்துப் போராடி சாதித்துக்காட்டிய தமிழ்ப்பேரினம், நீட் தேர்வைத் தவிர்க்கக் கோரும் கல்வியுரிமைக்காகவும் அணிதிரள வேண்டுமென தமிழ் இளையோர் கூட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறேன்.

மேலும், எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி, தமிழக அமைச்சரவையின் முடிவைக் கேலிக்கூத்தாக்கிய ஆளுநரின் நடவடிக்கைக்கு எவ்விதக் காத்திரமான எதிர்வினையையும் ஆற்றாது ஒத்திசைந்து சென்றதன் விளைவே, இதுபோன்ற அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடக்காரணமாக அமைகிறது என்பதை மாநில அரசு இத்தருணத்தில் உணர வேண்டியது அவசியமாகிறது.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல்தர மறுத்துத் திருப்பியனுப்பும் பட்சத்தில், இரண்டாவது முறையாக சட்டவரைவை இயற்றும்போது அதனை நிராகரித்து திருப்பியனுப்ப முடியாது எனும் சட்டவிதியைச் சாதகமாக்க, மீண்டும் விலக்குகோரி தமிழகச் சட்டமன்றத்தில் சட்டவரைவை இயற்ற வேண்டுமெனவும், நீட் தேர்வு என்பதை மாணவர்களின் கல்வி தொடர்பானச் சிக்கல் எனச் சுருங்கப்பாராது, மாநிலத்தின் இறையாண்மைக்குவிடப்பட்ட சவாலெனக் கருதி, நாடு தழுவிய அளவில் பெரும் அணிசேர்க்கையை செய்து, ஒன்றிய அரசுக்கு அரசியல் நெருக்கடியையும், அழுத்தத்தையும் தந்து, நீட் தேர்வு விலக்கைச் சாத்தியப்படுத்த வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response