திமுகவைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினரானார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 ஜூலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அ.முகமது ஜான், உடல்நலக் குறைவு காரணமாக 2021 மார்ச் 23 aaம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.செப்டம்பா் 13-ஆம் தேதி இடைத் தோதல் நடைபெறும் என தோதல் ஆணையம் அறிவித்தது.

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால், மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இந்நிலையில், எம்.எம்.அப்துல்லாவின் மனு செப்சம்பர் 1 அன்று ஏற்கப்பட்டது. 3 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், எம்.எம்.அப்துல்லா போட்டியின்றித் தேர்வாவது உறுதியானது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் இன்று (செப்டம்பர் 03) அதனை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இது தொடர்பாக, இன்று கி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

“தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலில் காலி இடம் 1. சட்டப்படி செல்லத்தக்கதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுவின் எண்ணிக்கை 1. இரண்டும் சமமாக உள்ளதால், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் – 53 (2), 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்துவது குறித்த விதி – 11(1)-ன்படி திமுகவைச் சேர்ந்த மு.முகமது அப்துல்லா போட்டியின்றி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுகவுக்குத் தற்போது ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ், எம்.சண்முகம், திருச்சி சிவா, பி.வில்சன் ஆகிய 7 உறுப்பினர்கள் உள்ளனர். அப்துல்லா போட்டியின்றித் தேர்வாகியுள்ளதால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Response