அதிமுகவின் அவைத்தலைவராக இருந்து வருபவர் மதுசூதனன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடம் ஆகியிருப்பதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், எனினும் அவரின் உடல்நிலை சீரடையவில்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கழகத்தின் மூத்த முன்னோடி மற்றும் கழக அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் மறைவு எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்.
என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக அவைத்தலைவராக நீண்ட காலமாக இருந்து வருபவர் மதுசூதனன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் மதுசூதனன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.