விடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெறமுடியவில்லை. இதற்குத் தமிழகத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம்
விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான
பலமான அத்திவாரத்தைப் போட்டுத் தந்துள்ளது. அந்த அத்திவாரம் இன்றும் அப்படியே உள்ளது.அந்தஅடித்தளத்தைப் பயன்படுத்தி எமக்கான தனித்துவமான ஈழ சினிமாவைக் கட்டியெழுப்புவதற்குத் திரைத்துறையில் ஆர்வம் கொண்டிருக்கும் இளங்கலைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ஈழத்திரைச் செயற்பாட்டாளர் அமரர் ந.கேசவராஜ் நினைவரங்கு நிகழ்ச்சி தமிழ்த் தேசியப்
பசுமை இயக்கத்தின் கலை, இலக்கிய அணியால் நேற்று (24.01.2021) ஞாயிற்றுக்கிழமை நல்லூர்
இளங்கலைஞர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில்,குறும்பட இயக்குநர் திருமதி ஷாலினி சாள்ஸ்,மூத்த படைப்பாளீ நா. யோகேந்திரநாதன்,இசையமைப்பாளர் கண்ணன் முரளி, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெகுசன ஊடகங்களில் காட்சி ஊடகமான திரைத்துறை மிகப்பலம் வாய்ந்தது. மக்களிடம் எளிதில்
சென்றடையக்கூடிய இவ்வூடகம் அவர்களிடையே கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி கதாபாத்திரங்கள்
பற்றிய விம்பங்களைக் கட்டியமைக்கின்றது.

இத்திரைத்துறையைப் பயன்படுத்தியே தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் அவர்களால் முதலமைச்சராக முடிந்தது. இன்றும் பல நடிகர்கள் இந்த வழியூடாகவே அரசியலில் பிரவேசிக்க முயன்றுகொண்டிருக்கின்றனர்.

திரைத்துறையின் முக்கியத்துவங்களைப் புரிந்துகொண்டதாலேயே போராட்ட நெருக்கடிகளின் மத்தியிலும்
விடுதலைப் புலிகள் தனியானதொரு துறையாக திரைப்படத் துறையை வளர்த்தெடுத்தனர்.

போரின் நியாயங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கும், போரினால் மக்கள் படும் வலிகளை வெளியுலகுக்குக்
கொண்டு செல்வதற்கும் குறும்படங்களையும் முழுநீளத் திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும்
உருவாக்கினார்கள்.

தமிழ் நாட்டின் வியாபார நோக்கைக்கொண்ட திரைப்படங்களில் இருந்து
மாறுபட்டு இத்திரைப்படங்களைக் கலைத்துவ ரீதியான படங்களாக, தனித்துவமான ஈழ சினிமாவாக
உருவாக்குவதில் கூடிய சிரத்தை எடுத்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறையின் பாசறையில் போராளி இயக்குநர்களான பரதன், சேரலாதன்,
குயிலினி ஆகியோருடன், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்லாத இயக்குநர்களான ஞானரதன்,
கேசவராஜ், முல்லை யேசுதாஸ், தாசன் ஆகியோரும் எங்களது வாழ்வியலைப் பிரதிபலிக்கத்தக்க
படங்களை உருவாக்கியிருந்தார்கள்.

போதிய தொழில்நுட்பவசதிகளும் முன் அனுபவமும் இல்லாது இருந்தபோதும் அவர்கள் உருவாக்கிய பல படங்கள் இப்போது பார்க்கும்போதும் பிரமிக்க வைக்கின்றன.

திரைத்துறையில் இப்போது கால்பதித்திருக்கும் எமது இளங்கலைஞர்கள் இப்படங்களைத் தங்களுக்கான
பாடங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Response