சென்னையில் தொடரும் கனமழை – தொடர்பு எண்கள் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

வானிலை மையம் சொன்னபடி, சென்னையில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது.

சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கிண்டி, அண்ணாசாலை, வேப்பேரி, வடபழனி, வில்லிவாக்கம்,புழல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலையில் இருந்தும் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளைக் கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தால் 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Leave a Response