பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட சிக்கல் – மன்னிப்பு கேட்ட நடிகர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். அவர், ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களிடையே உரையாடுவார்.

அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கமல்ஹாசனின் உரையாடல் அமையும். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் சேரன் மீது சுமத்திய வீண்பழி குறித்து கமல்ஹாசன் பேசினார். டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறாகப் பிடித்து இழுத்ததாக மீராமிதுன் கூறியதை அடுத்து அவருக்கான குறும்படமும் ஒளிபரப்பானது.

தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்துச் செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கமல்ஹாசன் கூற, தனது கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.

பதிலுக்கு, பாருங்கள் சரவணன் கூட அதைக் கண்டித்திருப்பார் போல என்று கமல்ஹாசன் கூற, நான் கல்லூரிக் காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறினார் சரவணன். அதிர்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூறினார். அதற்கு அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கை தட்டினர்.

இதனால் நடிகர் சரவணனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்று சரவணனை மன்னிப்பு கேட்கும்படி பிக்பாஸ் கூறினார். இதையடுத்து பேசிய சரவணன், “கல்லூரியில் படிக்கும் போது நான் செய்த தவறுகள் பற்றிப் பேசினேன். அதுபோல யாரும் செய்யாதீர்கள் என சொல்வதற்காகத்தான் அதைச் சொன்னேன். ஆனால் அப்போது என்னால் முழுவதுமாகப் பேச முடியவில்லை. இந்த தருணத்தில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

இதையடுத்து இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Response