சென்னை அருகே வங்கக் கடலில் உருவாகி, தமிழ்நாட்டைத் தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ஃபனி புயல் திடீரென பாதை மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கிச் சென்றது.
இந்தப் புயல் நேற்று முன்தினம் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையைக் கொடுத்தது. பெரும் சூறாவளிக் காற்றும் வீசியது. நேற்றும் இது தொடர்ந்தது. ஸ்ரீகாகுளத்தில் அபாய எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடப்பட்டது. அங்கு 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, 126 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவைத் தாக்க வந்த புயல்களில், இது தீவிரமானது என வகைப்படுத்தப்பட்டது. ஒடிசா நோக்கிச் சென்ற ஃபனி புயலால் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது.
பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கன மழை பெய்தது.இதனால் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதித்தது. 147 தொடர்வண்டிச் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து புவனேசுவரத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
வடக்கு, வட கிழக்கு நோக்கி நகர்ந்த ஃபனி புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் கரையைக் கடந்தது.
இதனால் 14 மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன. சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளிக் காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு சேவைகள் முடங்கின.
புவனேசுவரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானங்கள் காற்றோடு காற்றாகப் பறந்தன. இருப்பினும் அங்கு நோயாளிகள், ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நலபானா பறவைகள் சரணாலயம், பாலுகந்தா வனவிலங்கு புகலிடம், நந்தன் கனன் உயிரியல் பூங்கா, பிடாரகனிகா வனவிலங்கு புகலிடம் ஆகியவையும் ஃபனி புயலால் சின்னாபின்னமாகின.
கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின.
குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ஃபனி புயல் ருத்ரதாண்டவமாடி விட்டது. அங்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடிக்கிடந்தன. கடைகளும் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்தார். நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.
பூரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் மரம் விழுந்து பலி ஆனார். நயகார் மாவட்டத்தில் ஒரு பெண் தண்ணீர் எடுக்கச்சென்றபோது பறந்து வந்த வீட்டின் கூரை விழுந்து உயிரிழந்தார். கேந்திரப்பாரா மாவட்டத்தில் 65 வயதான மூதாட்டி புயல் நிவாரண தங்கும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஒடிசாவில் புயல் மழைக்கு மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர்.
புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கிப் படுகாயம் அடைந்த பலரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 28 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு அதிரடிப் படையின் 20 குழுக்கள், மாநில தீயணைப்பு படையின் 525 குழுக்கள் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.
நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11½ லட்சம் மக்கள் ஃபனி புயல் ஆபத்து பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அரசின் பல்நோக்கு தங்கும் இடங்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்காக 5 ஆயிரம் தற்காலிக சமையலறைகள் உருவாக்கப்பட்டு, உணவு சமைத்து பரிமாறப்பட்டது.
ஒடிசாவில் ஃபனி புயல் கரையைக் கடந்தபோது, வரலாறு காணாத வகையில் புயல் மிக நீளமானதாக இருந்தது. 28 கிமீ சுற்றளவு கொண்ட இந்தப் புயலின் மையப்பகுதி மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்தது. இதனால், ஒரு இடத்தை அது கடப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.
குர்தா, கட்டாக், ஜெய்ப்பூர், பாத்ராக் மற்றும் பாலசோர் வழியாக இது கரையைக் கடந்தது. முதலில் 175 கிமீ வேகத்திலும், பின்னர் 250 கிமீ என காற்றின் வேகம் அதிகரித்தது. 3 மணி நேரத்துக்குப் பிறகு புயல் பலவீனமானது. பின்னர், படிப்படியாக காற்றின் வேகம் குறைந்தது.
ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபனி புயல் வங்காள தேசத்தை நோக்கிச் சென்றது. நள்ளிரவில் இருந்து அங்கு மழை பெய்யத் தொடங்கி உள்ளது. சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது.
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தை இரத்து செய்துள்ளார். கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கொல்கத்தா-சென்னை மார்க்கத்தில் 220-க்கும் மேற்பட்ட தொடர்வண்டிச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்தவர்கள் பிற் பகலில் வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து இது அண்டை நாடான வங்க தேசத்துக்குள் குல்னா கடற்கரைப் பகுதி வழியாக நுழையும் எனவும் இந்திய வானிலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.