கைது செய்த பின்பும் தொடரும் பரப்புரை – அதிரும் இந்தியா

தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைத்த “தமிழக வேலைகள் தமிழருக்கே” என்ற முழக்கம் இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது.

இதையொட்டி, திருச்சி பொன்மலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி பொன்மலையிலுள்ள தொடர்வண்டித்துறைப் பணிமனையில் புதிதாக எடுத்துள்ள 300 பணியாளர்கள் அனைவருமே இந்திக்காரர்கள். தமிழ்நாட்டிலேயே தமிழினத்தை ஒதுக்கி வைக்கும் இந்திய அரசின் இன ஒதுக்கலைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (மே 3) திருச்சி பொன்மலை பணிமனை முன்பு தமிழர் மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில், பல்வேறு கட்சி – இயக்கங்களைச் சேர்ந்தோர் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

பொன்மலை இரயில்வே பணிமனையில் பணியமர்த்தப்பட்டுள்ள 300 இந்திக்காரர்களை வெளியேற்ற வேண்டும், தமிழர்களுக்கே 90% வேலை வழங்க வேண்டும் என்று கோரி ஆவேச முழக்கங்களுடன் பணிமனையின் முதன்மை நுழைவு வாயிலை நோக்கிப் பேரணியாக திரண்டு சென்ற தமிழ்த்தேசிய-ப் பேரியக்கத்தவர்களை பணிமனையின் வாயிலில் (ஆர்மரி கேட்) காவல் துறையினர் மறித்து தடுத்து நிறுத்தினார்.

அங்கு ஆவேச முழக்கங்களை எழுப்பிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் சாலையில் படுத்தனர்.

“வெளியேற்று வெளியேற்று, வெளியாரை வெளியேற்று”, “இந்திக்காரர்களை வெளியேற்று”, “வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடு என்ன திறந்த வீடா?”, “மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்க தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசமுடன் எழுப்பினர்.

இதனையடுத்து, காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் அனைவரையும் கைது செய்து ஏற்றினர். படித்த இளைஞர்கள் – ஆண்களும் பெண்களுமாக, தங்கள் கைக்குழந்தைகளுடன் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்பெ.மணியரசன், பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழர் தேசிய
முன்னணி பொதுச் செயலாளர் ஐயனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் பெரியார் சரவணன், நாம் தமிழர் கட்சி தஞ்சை பொறுப்பாளர். கிருஷ்ணகுமார், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் ம.பா. சின்னதுரை, தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், மகளிர் ஆயம் தலைவர் ம. இலட்சுமி அம்மாள், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டர் – முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் “தமிழக வேலை தமிழருக்கே” என்ற முழக்கத்தோடு தமிழ்த்தேசியப் பேரியக்கமும், தமிழின உணர்வாளர்களும் முன்னெடுத்தப் பரப்புரை இயக்கம் இந்திய அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளதோடு, முதல்நிலை பெற்றது.

மராட்டிய மாநிலத்தினர் சிலர், நமது போராட்டத்தை ஆதரித்தும் மராட்டிய மாநிலப் பணிகள் மராட்டியர்களுக்கே என்றும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கினர்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர். தி. வேல்முருகன், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமார், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் உள்ளிட்ட பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்கள், இக்கோரிக்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் உள்ள தமிழ் மக்கள் பலரும் அவரவர் இல்லங்களில் இருந்துகொண்டே தமிழக வேலை தமிழருக்கே என்ற தலைப்பிலே முழக்கங்களை எழுப்பி, இந்திய அரசையும் தென்னகத் தொடர்வண்டி துறை, திருச்சி தொடர்வண்டி கோட்ட மேலாளர் உள்ளிட்ட பலரையும் தங்கள் ட்விட்டர் பதிவுகள் வாயிலாக கேள்வி கேட்டு – தமிழர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

பலர் வெளி மாநிலத்தவரால் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பதிவிட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் நமது முழக்கம் பேசு பொருளாகியுள்ளது!

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள், தற்போது அடைத்து வைக்கப்பட்டுள்ள மண்டபத்திலிருந்து கொண்டே, இச்சமூக வலைத்தளப் பரப்புரையில் பங்கெடுத்து வருகின்றனர்.

#தமிழகவேலைதமிழருக்கே – #TamilnaduJobsForTamils

Leave a Response