கோவை அருகே உள்ள சூலூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ், இன்று காலை எழுந்து, 7 மணி அளவில் செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அப்படியே மயங்கிவிழுந்தார் கனகராஜ். இதையடுத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் செயல்பட்டு வந்தவர் கனகராஜ். சூலூர் தொகுதியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார்.
அதிமுகவில், எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என்று பிரிந்திருந்த வேளையில் கூட, இவர் அதிமுகவின் பக்கமே இருந்தார். இப்போது அவரின் மரணம், அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜின் திடீர் மரணத்தையொட்டி 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது போல், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வந்த அவருடைய திடீர் மரணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.