திருவாரூரில் இருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தார். பெற்றோர்: முத்துவேல் – அஞ்சுகம் அம்மையார்.
கருணாநிதிக்கு சண்முக சுந்தரம், பெரிய நாயகி என்று இரு தமக்கைகள். குடும்பத்திற்கு ஒரே ஆண் பிள்ளை கருணாநிதி.
பள்ளியில் படிக்கும்போதே அரசியலிலும், இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவராகக் கருணாநிதி விளங்கினார். அப்போது ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்.
‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்து மன்றத்தில் பேச செய்தார்.
1942-ல், அண்ணா நடத்தி வந்த “திராவிட நாடு” ஏட்டின் மூன்றாவது இதழில், கருணாநிதி எழுதிய “இளமைப்பலி’ என்ற எழுத்தோவியம் பிரசுரமாகியது. இக்கட்டுரை அண்ணாவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு விழாவுக்காகத் திருவாரூர் வந்த அண்ணா, “இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அழைத்து வாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். சில நிமிடங்களில் கருணாநிதி அவர் முன் போய் நின்றார். “கருணாநிதி ஒரு பெரிய ஆளாக இருப்பார்” என்று நினைத்திருந்த அண்ணா, ஒரு சிறுவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
1944 செப்டம்பர் 13-ந்தேதி கருணாநிதிக்கு திருமணம் நடந்தது. மணமகள் பெயர் பத்மா.
கருணாநிதியின் நாடகங்களில் ஒன்றைப் பார்த்துப் பாராட்டிய தந்தை பெரியார், அவர் நடத்தி வந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக கருணாநிதியை நியமித்தார்.
1946-ல், திராவிடக் கழகத்தின் கொடி உருவாக்கப்பட்ட போது, நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்துக்கு, கருணாநிதி தன் ரத்தத்தை காணிக்கை ஆக்கினார்.பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
இந்தச் சமயத்தில் கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்தார். கருணாநிதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கின. மனைவி பத்மாவுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் படத்தில் அவர் பெயர் விளம்பரப்படுத்தப்படவில்லை.
திராவிடர் கழகத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் கருணாநிதி வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அவர் மனைவி பத்மா, கணவரையும் கைக்குழந்தை முத்துவையும் கலங்க வைத்துவிட்டு இயற்கை எய்தினார். 1948 செப்டம்பர் 15-ந்தேதி, தயாளு அம்மாளை கருணாநிதி மணந்து கொண்டார்.
1949 செப்டம்பர் 17-ந்தேதி அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உதயமாயிற்று.
தி.மு.கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராய் விளங்கிய கருணாநிதி, மாடர்ன் தியேட்டர் தயாரித்த “மந்திரி குமாரி” படத்துக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றார்.
1952-ல் “பராசக்தி” படத்திற்கு வசனம் எழுதி, புகழின் சிகரத்தைத் தொட்டார். இப்படத்தில்தான் சிவாஜிகணேசன் அறிமுகமானார்.
1953 ஜூலை மாதத்தில் தி.மு. கழகம் “மும்முனைப் போராட்டம்” நடத்தியது. டால்மியாபுரத்தின் பெயரைக் “கல்லக்குடி” என்று மாற்றக் கோரி நடந்த போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார், கலைஞர். அவரைப் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
1957 தேர்தலில் தி.மு.கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியது. குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார்.
1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் 1963 ஜனவரி 17-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
1967 பொதுத்தேர்தல், தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்து, தி.மு.கழகம் ஆட்சி பீடம் ஏறியது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். கருணாநிதி, பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
பின்னர் போக்குவரத்துத் துறைக்கும் பொறுப்பேற்றார். அப்போது, பேருந்துகளை அரசுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கூட முடியாத நிலையில் 1969 பிப்ரவரி 2-ந்தேதி நள்ளிரவு அண்ணா மறைந்தார்.
அறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருணாநிதி முதல்-அமைச்சரானார்.
1969 பிப்ரவரி 10-ந்தேதி கருணாநிதியின் அமைச்சரவை பதவி ஏற்றது.
மத்திய-மாநில அதிகாரப் பங்கீடு பற்றி நிர்ணயிக்க ‘ராஜ மன்னார் குழு’வை அமைத்தார்.
1971-ல் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தலைச் சந்திக்க, பிரதமர் இந்திராகாந்தி முடிவு செய்தார். இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்த கலைஞர், தமிழக சட்டசபையையும் கலைத்து விட்டுப் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலையும் நடத்தத் துணிச்சலாக முடிவு எடுத்தார்.
ராஜாஜியும், காமராஜரும் கூட்டணி அமைத்து எதிர்த்தும், கலைஞரை வீழ்த்த முடியவில்லை.
தேர்தலில், தி.மு.கழகம் 184 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 1971 மார்ச் 15-ந் தேதி கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்-அமைச்சரானார்.
1975-ல் இந்திராகாந்தி “நெருக்கடி நிலை”யைப் பிரகடனம் செய்தார். இதைக் கருணாநிதி எதிர்த்தார். இதன் விளைவாக, 1976 ஜனவரி 31-ந்தேதி மாலை தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது.
கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், மருமகன் முரசொலிமாறன் மற்றும் கணக்கற்ற தி.மு.கழக பிரமுகர்கள் தொண்டர்கள் “மிசா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெருக்கடி நிலையின்போது, கருணாநிதி சந்தித்த சோதனைகள் ஏராளம். அவற்றையெல்லாம் பொறுமையுடனும், மன உறுதியுடனும் தாங்கிக் கொண்டார்.
1977-ல் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தார். கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவரானார்.
எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார். இந்திரா காந்திக்கு கறுப்புக்கொடி காட்டப் போனபோது, கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் சிறையில் இருந்த போது, 28.11.1977 அன்று மு.க.ஸ்டாலினுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்தது.8.12.1977-ல் ரிமாண்ட் காலம் முடிந்ததும், விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லியில் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஜனதா அரசும், பின்னர் சரண்சிங் அரசும் கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் பாராளுமன்றத் தேர்தல் நடந்தது.
நெருக்கடி நிலை காரணமாக இந்திரா காந்தி – கருணாநிதி நட்புறவு பாதிக்கப்பட்டிருந்த போதிலும், 1980 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க இந்திரா விரும்பினார். பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து, இ.காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கருணாநிதி சம்மதித்தார்.
அந்தத் தேர்தலில், இந்திரா காந்தி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளை தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணி பிடித்தது.
1989-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. 13 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு, கருணாநிதி மீண்டும். (3-வது முறையாக) முதல்-அமைச்சரானார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவிடாமல் அவர் மந்திரிசபையை, 1991 ஜனவரி 30-ந்தேதியன்று அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் கலைத்தார்.
பிறகு, 1991 மே மாதம் நடைபெற்ற, சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் நடந்த ராஜீவ்காந்தி படுகொலை காரணமாக தி.மு.கழகம் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார்.
1996 மே மாதம் நடந்த தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. கருணாநிதி நான்காவது முறையாக முதல்-அமைச்சர் ஆனார்.தமிழகத்தில் நான்காவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி ஒருவர் தான்.
அதன்பின் 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை ஐந்தாம் தடவையாக ஆட்சி நடத்தினார்.
1957-ல் குளித்தலை தொகுதியிலும்,
1962-ல் தஞ்சையிலும்,
1967, 1971 ஆகிய தேர்தல்களில் சைதாப்பேட்டையிலும்,
1977, 1980 ஆகிய தேர்தல்களில் அண்ணா நகரிலும்,
1989, 1991 தேர்தல்களில் துறைமுகத்திலும்,
1996-2001 மற்றும் 2006 தேர்தல்களில் சேப்பாக்கத்திலும்
2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் திருவாரூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
33 ஆவது வயதில் சட்டமன்ற உறுப்பினரான அவர் தன்னுடைய 95 ஆவது வயதில் மரணிக்கும்போதும் சட்டமன்ற உறுப்பினராகவே மறைந்திருக்கிறார்.