
இணையதளங்களில் புதியபடங்களின் பதிவேற்றம் மற்றும் திருட்டு வீடியோ தொழிலில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு குழுவை அமைத்து கண்காணித்து வந்தனர்.அதற்காகத் தனி அலுவலகம் ஒன்றையும் அமைத்தனர்.
அந்தக் குழுவினர் tamilgun.com என்ற இணையதள உரிமையாளர் கவுரி சங்கரை தொடர்ந்து 6 மாதங்களாகக் கண்காணித்து வந்ததோடு, திருட்டு விசிடி தயாரிக்க மாஸ்டர் காப்பியை தருவதற்காக சென்னைக்கு அழைத்திருக்கின்றனர். அவர்களது அழைப்பை ஏற்று கவுரிசங்கர் சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்தார். அப்போது, கவுரி சங்கரை திருவல்லிக்கேணி போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இவர் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையத்தின் அட்மின் எனத் தகவல் வெளியானதால் சமூக வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது ‘தமிழ் ராக்கர்ஸ்’ ட்விட்டர் பக்கத்தில் ‘தவறான செய்தி’ என்று பதிவிட்டார்கள்.
மேலும், கைது செய்யப்பட்ட கவுரி சங்கர் ‘Tamil Gun’ என்ற இணையத்தின் அட்மின் என செய்திகளை வெளியிட்டார்கள். ஆனால் ‘Tamil Gun’ ஃபேஸ்புக் பக்கத்தில் “அப்பாவிகளைக் கைது செய்வதை நிறுத்துங்கள். எங்களுடைய அட்மின் கைது செய்யப்படவில்லை. ‘துப்பறிவாளன்’ படத்தை முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார்கள்.
தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரண்டு இணையதளங்களுமே “தாங்கள் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்திருப்பதால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இதற்கிடையே தமது படம் வெளிவரவிருப்பதால் அதன் விளம்பரத்துக்காகவே விஷால் இதையெல்லாம் செய்கிறாரா? என்கிற பேச்சுகள் தயாரிப்பாளர்களின் வாட்ஸ்ப் குழுக்களில் வலம்வருகின்றனவாம்.
அதேசமயம் ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகவும் விஷால் போராடுகிறார் அவருக்குப் பக்கபலமாக இருப்போம் என்கிற கருத்துகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றனவாம்.


