
பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் மலாலா. பெண்கள் கல்விக்காகப் போராடி வருகிறார். இதனால் அவர் தீவிரவாதிகளின் கோபத்திற்கு உள்ளானார்.
கடந்த 2012- ஆம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்றனர். இத்தாக்குதலில் உயிர் தப்பிய அவர் தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். கடந்த 2014- ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மலாலாவுக்கு, இங்கிலாந்தில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி பயில வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காக அவர் கடுமையாக உழைத்து வந்தார்.
அவருடைய விடா முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில அவருக்கு இடம் கிடைத்துவிட்டது. அவர் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதார துறையைத் தேர்வு செய்து உள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனக்கு இடம் கிடைத்திருப்பது குறித்து மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.


