டெலிகிராம் செயலிக்குத் தடை பின்னணியில் சதி – திடுக்கிடும் தகவல்

கடந்த மே மாதம் நடந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.இந்நிலையில், நீட் மறுதேர்வையொட்டி வரும் 22 ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெலிகிராம் நிறுவனர் மற்றும் சிஇஓ பாவெல் துரோவ் நேற்று தனது சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது….

சில பயனர்கள் கசிந்த வினாத்தாள்களைப் பகிர்ந்துகொண்டதற்காக டெலிகிராம் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில்,வினாத்தாளைக் கசியவிட்ட நபர்களைத் தண்டிக்கவில்லை.அதற்குப் பதிலாக,இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தண்டித்துள்ளது.இந்தத் தடையால் எதுவும் மாறிவிடப் போவதில்லை.தற்பொழுது அந்த வினாத்தாள் கசிவுகள் மற்ற சமூகவலைதள செயலிகளுக்கு மாறிவிட்டன.

கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியாவில் வினாத்தாள்களைப் பகிர்ந்த மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சேனல்களை டெலிகிராம் நீக்கியுள்ளது.மேலும்,தேதி மற்றும் திருத்தப்பட்ட பதிவுகளில் ‘திருத்தப்பட்டது’ என்ற குறியீட்டை இன்னும் தெளிவாகத் தெரியும்படி மாற்றியுள்ளோம்.டெலிகிராம் எப்போதுமே நல்லவிசயங்களுக்கான ஒரு சக்தி.அதனைத் தற்காலிகமாகத் தடை செய்வது மிகப்பெரிய தவறு.இந்தத் தடைக்கு பின்னால் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம்.ஏனெனில் பார்டர் கேட்வே புரோட்டோகால் (பிஜிபி) ஹைஜாக்கிங் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இந்தியாவிற்கு வெளியே உள்ள கோடிக்கணக்கான பயனர்களின் டெலிகிராம் அணுகலைத் தடுக்கிறது.

வாட்ஸ்அப்பை வைத்துள்ள மெட்டா நிறுவனம் ரிலையன்சில் முதலீடு செய்துள்ளது.எனவே டெலிகிராமை தடை செய்வதற்கான லாபியில் ரிலையன்ஸ்,வாட்ஸ்அப் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ரிலையன்ஸ் மற்றும் மெட்டா தரப்பில் பதில் தரப்படவில்லை.

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.இந்தவழக்கு நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான விடுமுறைக்கால அமர்வின் முன் குறிப்பிடப்பட்டது.அவர் இதனை அவசர அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.டெலிகிராம் நிறுவன வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒன்றியஅரசின் டெலிகிராம் செயலிக்குத் தடை விதிக்கும் நடவடிக்கையால் 15 கோடிக்கும் அதிகமாக பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.இந்தவழக்கு விரைவில் விசாரணைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Response