
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தனிப்பெரும்பான்மை இல்லாத தவெகவுக்கு காங்கிரசுக் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து விஜய் மற்றும் அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்தனர்.
விஜய்யின் கடிதத்தை ஏற்று ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடிதத்தில் 112 சட்டமன்ற உறுப்பினர்களின் விவரம் மட்டுமே இருந்ததால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கோரியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் சட்ட வல்லுநர்கள் குழு ஆளுநரை 2 ஆவது முறையாகச் சந்தித்து விளக்கம் கொடுத்தது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்காததால் விஜய்யின் பதவியேற்பு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போகிறது.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்….
விஜய் ஆட்சியை, திமுக ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றிப் பார்க்கும்.ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை,காலைஉணவுத் திட்டங்களை தவெக அரசு தொடரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளது குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம்.எங்களைப்போல மாதம் 1,000 ரூபாயாவது கொடுக்கவேண்டும் என்று கூறினார்.மேலும்,ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தரும் விஜய்யின் வாக்குறுதி குறித்தும் சந்தேகம் தெரிவித்த மு.க.ஸ்டாலின்,அதைச்செய்தால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.


