அதிமுக பாஜக கூட்டணியை உடைக்க அண்ணாமலை முயற்சி?

2026 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன.இருந்தாலும் அது பொருந்தாக் கூட்டணியாக இருக்கிறது. நாள்தோறும் இரண்டு பக்கமும் அதிருப்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

இந்நிலையில், தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து 78 தொகுதிகளைப் பெறவேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால், பாஜக ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளைப் பிரிக்க வேண்டும்.

ஒரு சில சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 2 ஆம் இடம் வந்தது. அதிமுக 3 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. பாஜக கூட்டணி 11.4 சதவீத ஓட்டுகள் பெற்றது.ஆகவே, அதிமுக- பாஜக பலத்தின் அடிப்படையில் தொகுதிப் பங்கீட்டைப் பெறவேண்டும் என கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அண்ணாமலையின் இந்தக் கடிதம் எடப்பாடி மற்றும் அதிமுக தலைவர்கள், தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய ஆதரவாளரும், அதிமுக வழக்குரைஞருமான மணிகண்டன் கூறியதாவது….

அண்ணாமலையின் முக்கிய நோக்கமே, பாஜக – அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி உடைய முக்கிய காரணமே அண்ணாமலைதான். வானத்தை வில்லாக வளைப்பேன் என பிரதமர் மோடியிடம் பேசினார். இவரது பொய்யான பேச்சை நம்பிய டெல்லி தலைமை, தனியாகப் போட்டியிட வைத்தது.ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. மத்தியில் ஆட்சி அமைப்பதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்திருந்தால் குறைந்தது 15 இடங்களை வென்றிருக்கலாம். இதன்பின்னரே இவரை அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் புரிந்து கொண்டதுடன், பாஜக மாநில தலைவர் பதவியைப் பறித்தனர்.
சமீபத்தில் மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அண்ணாமலையை அமித்ஷா கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதையும் மீறி அதிமுக கூட்டணியை உடைக்க முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கூட்டணி குறித்துப் பேசுவதற்கு அவர் தேர்தல் பொறுப்பாளர் அல்ல. 31 தேசியப் பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தான். பாஜகவின் மாநில தலைவர்களில் யார் வீட்டிலாவது வருமானவரித்துறை சோதனை நடத்தியது இல்லை. ஆனால் அண்ணாமலையின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அவரை பாஜக மேலிடம் கட்டம் கட்டி வைத்துள்ளது. அவரது நோக்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டும். அதிமுகவை அழிக்க வேண்டும், பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்ற விடக்கூடாது என்பதுதான். உடனடியாக பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், கோவையில் நேற்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்….

அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், பாதி தொதியில் பாஜக போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியதாக வெளியான தகவல் உண்மையல்ல.பாஜக தொண்டனாக உயிருள்ள வரை கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். 2026 தேர்தலில் யார் எவ்வளவு சீட் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள், என்னைப் பொறுத்தவரை பாஜக நிறைய இடங்களில் நிற்க வேண்டும்.
கட்சி முடிவிற்குக் கட்டுப்பட்டு சில இடங்களில் வாயை மூடிக் கொண்டு இருக்கிறேன். சில இடங்களில் பேசுகிறேன். எனக்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் எதாவது பேசினால் தேவையில்லாமல் பஞ்சாயத்து ஆகிவிடும். கூட்டணி ஆட்சி, கீட்டணி ஆட்சி என்று இல்லாமல் பாஜக ஆட்சி என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.இன்றைக்கு எங்கள் கட்சியின் தலைவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த முடிவுக்கு தொண்டனாக நாங்கள் கட்டுப்படுகிறோம்.
இது பற்றி எங்கள் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவார். பாஜகவை தவெக சித்தாந்த எதிரி என்கிறது. பாஜக அமைக்கும் கூட்டணி பொருந்தும் கூட்டணியாக இருக்கும். அதிமுக-பாஜக இடையே கொள்கை முரண்கள் இருப்பது உண்மைதான். இரு கட்சிகளுக்கும் ஒத்துபோகும் குறைந்தபட்ச செயல்திட்டங்கள் இரு கட்சித் தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வார்கள். அண்ணா பல்கலை பிஆர்ஓ நடராஜன் தொடர்ந்த மானநட்ட வழக்கில் மன்னிப்பு கேட்க முடியாது. அதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response