1983 தமிழினப்படுகொலை – கறுப்புஜூலை நினைவுச் சின்னம் வேண்டும்

1983 சூலை 24 இரவு,இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது,பின்னர் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவியது.ஏழு நாட்களில்,சிங்களக் கும்பல் தமிழர்களைத் தாக்கியது.உயிருடன் எரித்தனர்.படுகொலைகளைப் புரிந்தனர்.உடமைகளைக் கொள்ளையடித்தனர்.அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.அதிகாரப்பூர்வமற்ற எண்ணிக்கை கணக்கிலடங்காதது.150,000 பேர் வீடற்றவர்களாயினர்.ஏறத்தாழ 8,000 வீடுகளும்,5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன.இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.சுமார் இரண்டாயிரம் கோடி.பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 திசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.ஈழத்தமிழர்களாலும் உலகத் தமிழர்களாலும் கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த கறுப்பு ஜூலை நாளையொட்டி,தமிழீழம் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தலைவர் பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

1983 கறுப்பு ஜீலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்.
ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம் அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில் 1983 ஜீலையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு ஆகும்.

இது இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல.இது ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்காலப் போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும்.அந்தவகையில் 2027 ஜீலைக்கு முன்னதாகவாவது 1983 இன*க்*கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ்மக்களையும் நினைவுகூரும் வகையில் பொது நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும்.

1983 ஜீலையில் நிகழ்ந்தது இரு சமூகங்களுக்கிடையே வெடித்த ஒரு சாதாரண கலவரம் அல்ல.அது,அப்போதைய பேரினவாத அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தோடும்,அனுசரணையோடும் அரச இயந்திரங்களையும், வாக்காளர் பட்டியல்களையும் பயன்படுத்தித் தமிழ்மக்களை இனங்கண்டு மிகத் துல்லியமாக நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை ஆகும்.

கொழும்பில் ஆரம்பித்துத் தென் இலங்கையின் பிறபகுதிகளுக்கும் மலையகத்துக்கும் பரவிய பேரினவாத வெறியாட்டத்தில் வெலிக்கடைச் சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் உட்பட 3000 தமிழர்கள் வரையில்
படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜீலை இனக்கலவரம் தமிழ் மக்களின் உயிர்களை மாத்திரம் பலியெடுக்கவில்லை.அவர்களின் வீடுகள்,வணிக நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன.ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தமிழர்களின் பல தசாப்தகாலப் பொருளாதாரக் கட்டமைப்புகள் ஒரேவாரத்துக்குள் முற்றாகச் சிதைக்கப்பட்டன.தமிழ்மக்கள் வெறும் கையினர்களாக அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.இந்த வரலாற்றுத் துயரங்களை மறப்போம் மன்னிப்போம் என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்லமுடியாது.

எமது நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த வரலாற்றுப் பேரவலத்தின் பின்னணியையும்,அதன்மூலம் தமிழ் இனம் கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களையும் எமது அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது முதன்மையான தேசியக் கடமையாகும்.இந்த வரலாற்றுக் கடத்துகைக்கு நினைவேந்தல்களும்,நினைவுச் சின்னங்களும் அவசியமானவை ஆகும்.

எனவே, கறுப்பு ஜீலையில் எமது இனம் இழந்த உயிர்களின் சாட்சியாகவும்,எமது தேசிய விடுதலைப் பயணத்தின் வழிகாட்டியாகவும் பொருத்தமானதொரு இடத்தில் 1983 கறுப்பு ஜீலை நினைவுச்சின்னம் நிறுவப்படல் வேண்டும்

இவ்வாறு பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார்.

Leave a Response