
நீட் மோசடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள்,மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.சமீபத்தில் நடைபெற்ற பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து,பல மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துவரும் நிலையில், சமூகவலைதளங்கள் மூலம் கூட்டத்தைத் திரட்டி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.2 காவல் துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 300 காவலர்கள் மெரினா கடற்கரையில் பாதுகாப்புப்பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர்.காமராஜர் சாலை,கடற்கரைக்குள் செல்லும் நுழைவுவாயில்கள் மற்றும் முக்கியசந்திப்புகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
நேற்று காலை முதலே மெரினா கடற்கரைப் பகுதிக்குச் செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டது.யாரையும் கடற்கரைப் பகுதிக்கு அனுமதிக்கவில்லை.மாலை நேரத்தில் பொழுதுபோக்க சுற்றுலாப் பயணிகள்,வெளியூர் மக்கள் அதிகஅளவில் வந்ததால்,தீவிர சோதனைக்குப் பிறகு கடற்கரைப் பகுதிக்குச் செல்ல அவர்களை மட்டும் அனுமதித்தனர்.
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள்,சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் தீவிரசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
போராட்டக்காரர்கள் கூட்டமாக மெரினா கடற்கரைப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே,சைபர் க்ரைம் காவல்துறையினரும் வாட்ஸ்-அப், முகநூல், எக்ஸ் உள்ளிட்ட
சமூகவலைதளங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைத்து திடீர் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் முயற்சிகள் நடைபெறுகிறதா
என்பதை தீவிரமாகக் கண்காணித்து,தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னறிவிப்பின்றி திடீரென மெரினா கடற்கரை மூடப்பட்டதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியில் தவித்துப்போயினர்.
அறவழிப்போராட்டங்களுக்கு ஆதரவு என்று சொல்லியிருந்த விஜய் அரசு,இப்படி அடாவடியாக மெரினாவை மூடியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என செயற்பாட்டாளர்கள் விமர்சித்துவருகின்றனர்.


