தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே கடும் போட்டி நடந்துவருகிறது.
அண்ணாமலை தனக்கென ஒரு தனி ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் பாஜக தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற பிறகும், அண்ணாமலைக்கான ஆதரவை பிரதிபலிக்கும் வகையில், அவரது தீவிர ஆதரவாளரும் சேலம் மேற்கு மாவட்ட கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவருமான தங்கமணி, அண்ணாமலை பெயரில் இரசிகர் மன்றம் தொடங்கியுள்ளார்.
இந்த மன்றத்தை கடந்த 22 ஆம் தேதி சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் ஹரிராமன் தொடங்கி வைத்தார். பாஜகவில் தனி நபர்களின் பெயரில் எந்த மன்றமும் வைப்பதில்லை. ஏன் மோடிக்கே கூட மன்றங்கள் கிடையாது. அப்படி இருக்கும்போது அண்ணாமலைக்கு இரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளதும், அதை ஒரு மாவட்டத் தலைவரே தொடங்கி வைத்ததும், பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து நெல்லையிலும் அண்ணாமலை பெயரில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், உத்தமபாண்டியன்குளம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி வேல்கண்ணன் என்பவரால் ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் புதிதாக ஒரு அமைப்பு தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இதுதொடர்பான விளம்பரப் பதாகைகள் சமூக வலைதளங்களில் பரவி, நெல்லை பாஜக
வில் புதிய விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இந்த மன்றம் முற்றிலும் ஒரு சமூக சேவை அமைப்பு என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அதன் நிறுவனர் வேல்கண்ணன் தெரிவித்தாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து அண்ணாமலை நற்பணி மன்றத்தின் நிறுவனர் வேல்கண்ணன் ஊடகங்களிடம் கூறியதாவது…
அண்ணாமலை மீது, எங்களுக்கு உள்ள ஒரு தனிப்பட்ட ஈர்ப்புதான் நற்பணி மன்றம் தொடங்கக் காரணம். நாங்கள் ஏற்கனவே சமூகசேவைகளில் ஈடுபட்டு வருகிறோம். முழுக்க முழுக்க சமூகசேவை செய்வது மட்டும்தான் நற்பணி மன்றத்தின் நோக்கம். மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இந்த மன்றத்தைத் தொடங்கியுள்ளோம். நாங்களே சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து பேசித்தான் இந்தமுடிவை எடுத்தோம். மன்றம் தொடங்கப்படும் என்ற செய்தி தெரிந்ததும், பலரும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, தங்களையும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டம் முழுவதும் இந்த மன்றத்தை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.
அண்ணாமலையுடன் இருப்பவர்களிடம் பேசியிருக்கிறோம். அவரது கவனத்திற்கும் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர். நிச்சயமாக அவருடைய ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
அவர், ‘அரசியல் வேறு, சேவை வேறு’ என்று கூறினாலும், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டத்திலேயே, முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரில் ஒரு மன்றம் தொடங்கப்பட்டிருப்பது, பாஜகவில் நிலவும் உட்கட்சிப்பூசலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, நயினார் – அண்ணாமலை இடையே கருத்து மோதல் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தநிகழ்வு வரும் காலங்களில் பாஜகவில் புதிய அதிகாரமையத்தை உருவாக்கலாம் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.இதனால் தமிழ்நாடு பாஜகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.