விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மகன் அன்புமணிக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. கட்சியில் அதிகாரம் மற்றும் யாருடன் கூட்டணி என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பதிலும் இரு தரப்புக்கும் போட்டி வலுத்து வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அன்புமணி உறுதியாக இருக்கிறார். மருத்துவர் இராமதாசு திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் பாமகவின் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு மருத்துவர் இராமதாசுவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசை தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அக்டோபர் 24 ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும் தனது அண்ணன் சி.வி.இராதாகிருஷ்ணனின் மகன் அர்ஜுன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து, அதற்கான திருமண அழைப்பிதழையும் சி.வி சண்முகம் வழங்கினார்.
அண்ணன் மகன் திருமண அழைப்பிதழை மருத்துவர் இராமதாசிடம் வழங்குவதற்காகச் சந்தித்த போதிலும், கூட்டணி மற்றும் அரசியல் நிலவரம் குறித்தும் பேசி இருக்கலாம் எனவும்,அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றாக சி.வி.சண்முகத்தை முதலமைச்சர் வேட்பாளராக்க பாஜக முனைகிற விசயத்தை மருத்துவர் இராமதாசிடம் எடுத்துச் சொல்லி நம் சமூகத்தைச் சேர்ந்த எனக்காக நீங்களும் எங்களுடன் இணையவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.