
தமிழ்நாடு அரசு சார்பில், இசைஞானி இளையராஜாவின் இசைப் பயண பொன்விழா ஆண்டையொட்டி ‘ராஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் ஏற்புரையாற்றி இளையராஜா பேசியதாவது…..
இசை உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு இசை அமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடத்துவது தமிழ்நாடு அரசு தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நான் சிம்பொனி இசை அரங்கேற்றம்
செய்யப்போகிறேன் என்ற உடன் அதற்கு முதல்நாளே வந்து வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பினார். இலண்டனில் இருந்து திரும்பி வந்தபோது அரசு சார்பில் வரவேற்றார். தற்போது பாராட்டு விழாவும் நடத்திவிட்டார். இதை
என்னால் நம்ப முடியவில்லை.
என்மேல் அவ்வளவு அன்பு வைப்பதற்கு என்ன காரணம், இசைதானா?, அவரது அப்பா முன்னாள் முதல்மைச்சர் கலைஞர் சூட்டிய இசைஞானி என்ற பட்டமே எனக்கு பேராகிவிட்டது. அரசு சார்பில் எந்த இசைக்கலைஞனுக்கும் பராட்டு விழா நடந்தது இல்லை. இது இசை உலகின் சரித்திரமாக கருதுகிறேன். இதை என்னால் இன்னும்
நம்ப முடியவிலலை. என்ன பேச வேண்டும் என்பதே மறந்துவிட்டது.
இசையிலேயே என் வாழ்க்கை முழுவதும் சென்றது. என்னுடைய குழந்தைகளுக்காக நான் நேரம் செலவழிக்கவில்லை.அப்படி நேரம் செலவழித்திருந்தால் இந்த சிம்பொனியை அமைத்திருக்க முடியாது. இதேபோல நீங்கள் விரும்பிக் கேட்கின்ற அவ்வளவு பாடல்களையும் கம்போஸ் செய்திருக்க முடியாது. அதனால், நான் எனது
பிள்ளைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிம்பொனி அமைக்கும்போது எந்தச் சாயலும் இருக்கக் கூடாது. அதையும் மீறி 35 நாட்களில் இந்த சிம்பொனியை அமைத்திருக்கிறேன். சிம்பொனிக்காக எனது வாழ்க்கையை
அர்ப்பணித்தேன். சிம்பொனி இசையை பெரிய மைதானத்தில் நடத்த தேவையான உதவிகளை முதலமைச்சர்
செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.


