
ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது.
அதை வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022 இல் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, கல்விக் கொள்கைக்கான 520 பக்க வரைவு அறிக்கையை 2023 அக்டோபரில் வடிவமைத்தனர்.அந்த அறிக்கையை 2024 ஜூலை 1 இல் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்….
ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளைப் பேச, படிக்க, எழுத வைப்பதே முதன்மை நோக்கம். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்ட விதிகளின்படி, மாணவர்கள் கூடுதலாக தம் தாய்மொழியைக் கற்க வாய்ப்பு வழங்க வேண்டும்.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை உறுதிசெய்ய வேண்டும். அதேநேரம், ஆண்டு இறுதித் தேர்வுகளின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளின்படி தேர்ச்சி இருக்க வேண்டும்.
10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். மாணவர் நலன் கருதி, பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இரத்து செய்யப்படுகிறது.
பள்ளிகளில் 1, 2, 3 ஆம் வகுப்பு மாணவர்கள் வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல், எண்ணறிவு திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சார் திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களின் திறன்கள் தொடர்பான
தரவுகளைச் சேகரிக்க, பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு தொடர் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவு (ஸ்லாஸ்) தேர்வு நடத்தப்படும்.
அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும், இந்தத் திட்டத்தில் உரிய
மாற்றங்களைக் கொண்டுவரவும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றாம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப்புத்தகங்களை மாற்ற வேண்டும். கற்றலில் பின்தங்கிய
மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குக் குறைதீர்வு கற்பித்தலை வழங்கி வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டு வரப்படுவார்கள். முதல் தலைமுறை கற்போர், பழங்குடியினர், பெண் குழந்தைகளை பள்ளியில் தக்கவைக்கவும், அவர்களது கற்றல் விளைவுகளை முன்னேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
பாகுபாடு, பாலின அடிப்படையிலான வன்முறை, முடிவெடுக்கும் திறன் போன்ற வாழ்க்கைத் திறன் சார்ந்த சமூக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வளர்இளம் பருவத்தினர் சரியானவற்றைத் தெரிந்தவர்களாக, நெகிழ்வுத்தன்மை உடையவர்களாக, திறன் பெற்றவர்களாக வளரத் தேவையான கலைத் திட்டம் இணைக்கப்படும்.
புலம்பெயர்ந்தோர், பழங்குடியினக் குழந்தைகளுக்கு இருமொழிக் கல்வி வளங்களை வழங்குவதன் மூலம்
அவர்களது கற்றல் இடைவெளியைக் குறைக்கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்களும் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 உடற்கல்வி பாடவேளை கள் இருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பாரம்பரிய, நவீன விளையாட்டுகளை இணைக்கவேண்டும். அதில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க வேண்டும்.
மனப்பாடம் அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை விட்டு, பாடக் கருத்துகளை புரிந்து கொள்ளுதல், சிந்தனைத் திறன், பெற்ற அறிவை புதிய சூழல்களில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறவேண்டும்.
‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின் கீழ் வட்டார அளவில் சிறந்த 500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, மாதிரி பள்ளிபோல கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைக்கும் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்…
ஒன்றிய அரசு, 3,5,8,10,11,12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று சொல்கிறது தமிழ்நாடு அரசோ பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்கிறது..
ஒன்றிய அரசு,3,5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுதேர்வு கட்டாயம் என்கிறது.தமிழ்நாடு அரசு, எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்று சொல்கிறது.
ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தவேண்டும் என்று சொல்கிறது.தமிழ்நாடு அரசு இருமொழிக்கொள்கைதான் என்பதில் உறுதியாக இருக்கிறது.
க்ல்வி பொதுப்பட்டியலில் நீடிக்கும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் வயது 6 என்று ஒன்றிய அரசு சொல்கிறது.ஐந்து வயதில் முதல்வகுப்பில் சேர்க்கலாம் என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது.
இவற்றோடு நீட் தேர்வு கூடாது,தொடக்க நிலை முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல்,பள்ளிக் கல்விகளில் தமிழை முதல்மொழியாக முன்னிறுத்துதல் உட்பட பல அம்சங்கள் தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.


