
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பினால் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவின் அவசர அழைப்பில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை கூறியதாவது….
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினேன். மாநில தலைவராக எனது கருத்தை கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நிறைய காலம் உள்ளது. பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்துப் பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை.
கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம். எனது கட்சியை வலிமைப்படுத்தவே உழைத்து வருகிறேன். தொண்டனாகவும் பணி செய்வேன்.
பாஜக தேசியத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கட்சி நலனைவிட தமிழ்நாடு நலனே முக்கியம்.
மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். மைக் எடுத்துப் பேசி, கைகாட்டிவிட்டுப் போவதில்லை அரசியல்; களத்தில் வேலை செய்ய வேண்டும்.சக்திமிக்கவர்களைப் பேசினால் மைலேஜ் கிடைக்கும்; அதனால் பிரதமர் பற்றி விஜய் பேசுகிறார்.
தினமும் போராடுவது ஒரு அரசியல்; கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களைச் சந்தித்துள்ளார்? மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
இதில்,கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம். எனது கட்சியை வலிமைப்படுத்தவே உழைத்து வருகிறேன். தொண்டனாகவும் பணி செய்வேன் என்று கூறியிருப்பதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி உறுதி என்பதையும் தலைவர் பொறுப்பில் இருந்து தான் மாற்றப்படலாம் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.


