காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிசம்பர் 14,2024) காலை காலமானார். அவருக்கு வயது 75.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை அளித்த மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரசு முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த அவரது மகன் திருமகன் உயிரிழந்த நிலையில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
அவர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவம்பர் 11 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக இன்று அதிகாலையில் இருந்தே தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் இன்று காலை 10.12 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு உறுதி செய்துள்ளது.
காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் 76,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஏற்கெனவே, 1996, 2004, 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்த அவர், 2004 இல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1984 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 25,719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார். 1989 ஆம் ஆண்டு பவானிசாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவி இருந்தார்.
கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டப்பேரவை சென்றார்.
ஓராண்டு முடிவதற்குள்ளாகவே அவர் மறைந்தது பேரிழப்பு.
அவருடைய மறைவுக்குப் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் பொதுமக்கள் ஆகிய அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.