
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.17.19 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் கட்டிடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது…..
பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரமாக மாதம் ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத்திட்டத்தில் 21 வயது நிறைவடைந்த குடும்பத் தலைவிகள், இந்தத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே இந்தப்பணம் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 1 கோடியே 16 இலட்சம் பெண்கள் இந்தத்திட்டத்தினால் பயன் பெற்றுள்ளனர்.
அதேநேரம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மட்டுமே இந்தத்திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
குடும்பத்தில் யாராவது ஒருவர் நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாராவது ஒருவர் வருமான வரித்தாக்கல் செய்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
அதேபோல் முதியோர் உதவித் தொகை பெறும் மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்று தமிழ்நாடு அறிவித்திருந்தது. முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் உதவித்தொகை வழங்கப்படும் இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு மகளிர் உரிமைத் தொகையை இதுவரை பெறாத பெண்களை பெரும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
