சர்வாதிகார ஆணவம் முறியடிப்பு – அறிவிப்பை இரத்து செய்த ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் 45 இணைச் செயலாளர்கள் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப விளம்பரம் வெளியிடப்பட்டது.யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணிகளில் நியமிக்கப்பட்டதால் எதிர்ப்பு எழுந்தது. ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரசு, திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜேபி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

நேரடி நியமன முறை சமூகநீதி மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இடஒதுக்கீட்டு முறையையே ஒன்றிய அரசு ஒழிக்கப் பார்ப்பதாக மக்களை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வளவு கடுமையான எதிர்ப்புகளை எதிர்பார்க்காத ஒன்றிய அரசு, தன் முடிவில் பின்வாங்கியுள்ளது.

இந்த நேரடி நியமன நடைமுறை விளம்பரத்தை இரத்து செய்ய யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடனுக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதினார்.

அதன்பின், சமூக நீதியைக் காக்கும் நடவடிக்கையாக நேரடி நியமன நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,வேலை வாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அவசியம் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஒன்றிய அரசில் பணியாற்ற நேரடியாக மூத்த அதிகாரிகள் 45 பேரை நியமிக்கும் நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,அரசியல் சாசனமும், சமூக நீதிக்கான போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. இடஒதுக்கீட்டைப் பறிக்கும் பாஜகவின் திட்டங்களை காங்கிரசு முறியடித்துள்ளது, அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே சர்வாதிகார ஆணவத்தை முறியடிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Response