பாஜக ஓபிஎஸ் அணி கூட்டணி உறுதி – இரட்டை இலை சின்னத்தில் போட்டி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.அதன்படி, இருவரும் ஒன்றாக இணைந்து இந்த மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளனர்.

பாஜக கூட்டணியில் தொடர்வதாக ஓ.பி.எஸ்.அணி அறிவித்துள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தொண்டர்களிடம் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியதாவது….

மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாட உள்ளோம்.தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால் இரட்டை இலை சின்னம் எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

இந்தியா சுபிட்சமாக இருக்க வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம். 10 ஆண்டுகள் நரேந்திர மோடி பிரதமராக பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்தியாவின் பெருமையை வளர்ந்த நாடுகளுக்கு மோடி எடுத்துச் சென்றுள்ளார். 3 ஆவது முறையாக மோடி பிரதமராக வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். ஏற்கெனவே பாஜக கூட்டணியில் தான் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக மட்டும்தான் இரட்டைஇலை சின்னம் பழனிச்சாமி தரப்புக்கு வழங்கப்பட்டது.அதுவும் நாங்கள் வழக்கை வாபஸ் பெற்றதால் அவர்களுக்குக் கிடைத்தது. அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தொகுதி அது.அதில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்ற நிலையில், பழனிச்சாமியை மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். விரைவில் விருப்பமனு பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பாஜக கூட்டணியில் சேர்ந்து தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி ஒ.பி.எஸ். அணிக்கு பாஜக நெருக்கடி தருவதாகச் செய்திகள் வெளியானது.

இந்தச் செய்திக்கு ஓபிஎஸ்ஸின் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான இரவீந்திரநாத் மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு, பாஜக – ஓபிஎஸ் அணி கூட்டணி 2 நாட்களில் முடிவாகும்,தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை.மோடியைப் பிரதமராக்குவதே எங்கள் நோக்கம் என இரவீந்திரநாத் கூறினார்.

Leave a Response