தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. நேற்றைய (பிப்ரவரி – 13) சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,
எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை அருகில்தான் துணைத் தலைவர் அமர்வது பேரவையில் மரபாக உள்ளது. துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு துணைத் தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்படவேண்டும். இதுகுறித்து பலமுறை தங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்துள்ள கோரிக்கையை மறு பரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யும்படி தங்களிடம் நான் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி – 14) எடப்பாடி அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதுவரை அந்த இடத்தில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரண்டாம் வரிசையில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் இருக்கைக்கு அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி அதிமுகவினரின் இந்தக் கோரிக்கை பல மாதங்களாக வைக்கப்பட்டுவருகிறது. இவ்வளவு நாட்கள் இதற்குச் செவிமடுக்காமல் இருந்தார் சட்டப்பேரவைத் தலைவர். நேற்று எடப்பாடிபழனிச்சாமி கோரிக்கை வைத்தவுடன் சட்டப்பேரவைத் தலைவர் பதில் சொல்வதற்கு முன்பாக முதலமைச்சர் பரிந்து பேசியதும், இன்று அக்கோரிக்கை ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருப்பதும் அரசியலில் பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.
இப்போது நடக்கும் எல்லா அரசியல் நிகழ்வுகளும் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே இருக்கின்றன. இந்நிலையில் இருக்கை மாற்றம் நடந்திருப்பதால், எடப்பாடி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மறைமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளதோ? அது தேர்தல்வரை நீடிக்குமோ? என்கிற ஐயம் அரசியல்வட்டத்தில் எழுந்துள்ளது.