வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கர்நாடகா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், இராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஒன்பது மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
நாகாலாந்து சட்டப் பேரவையின் பதவிக்காலம் மார்ச் 12 ஆம் தேதியுடனும், மேகாலயாவின் பதவிக்காலம் மார்ச் 15 ஆம் தேதியுடனும், திரிபுராவின் பதவிக்காலம் மார்ச் 22 ஆம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து மேற்கண்ட மூன்று மாநிலங்களும் சட்டப் பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் சென்றனர். அங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இன்று மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட்டனர். இவர்கள் அட்டவணையை வெளியிட்ட நிமிடம் முதல், மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
சனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
பிப்ரவரி 8 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நாளில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.
அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா காலமானதால் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
3 மாநிலத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.