கோயில்கள் தமிழில் பூசை என்பதைக் கட்டாயமாக்குக – தெய்வத்தமிழ்ப் பேரவை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில், வரும் 08.08.2022 அன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்……

ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார். தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களும், ஆன்மிகச் செயல்பாட்டாளர்களும் கோரிக்கைகளை விளக்கிப் பேசுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் :

1. “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்று ஆட்சியாளர்கள் ஆடம்பரமாகத் தொடங்கிய திட்டம், தோல்வி கண்டுவிட்டது என்பது இந்து சமய அறநிலைத்துறை அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. அதன்படி 47 பெருங்கோயில்களில், – மாதங்களில் 1500 பக்தர்கள்தாம் தமிழ் மந்திர அர்ச்சனைக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

கருவறையில் உள்ள பூசகர், தமிழ் மந்திரமும் சொல்லி பூசை செய்வதைக் கட்டாயமாக்காமல், விளம்பரத் தட்டியில் குறிப்பிட்டுள்ள அர்ச்சகரை வெளியில் இருந்து கூட்டி வந்து தமிழில் பூசை செய்ய வேண்டும் என்ற அரசின் ஏற்பாடே அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது.

கருவறையில் உள்ள அர்ச்சகரே தமிழ் – சமற்கிருதம் இரண்டிலும் பூசை செய்யக் கட்டளை இடுக! தேவையானால் உள்ளகப் பயிற்சி தருக!

வழிபட வருவோர்க்கு இயல்பாகத் தமிழில்தான் பூசை செய்ய வேண்டும். விரும்பிக் கேட்போர்க்கு மட்டுமே சமற்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று ஆணையிடுக!

47 திருக்கோயில்கள் மட்டுமின்றி, அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திர பூசை வேண்டும்.

திருக்குடமுழுக்குகளில் தமிழ் மந்திர பூசகர்கள் / ஓதுவார்கள் வேள்விச்சாலை, கோபுரக் கலசப் புனித நீர் ஊற்றல் உள்ளிட்ட அனைத்திலும் சம எண்ணிக்கையில் பங்கு பெற வேண்டும்.

2. சாதி வேறுபாடு காட்டாமல், தகுதியுள்ள அனைத்துச் சாதியினரையும் பூசகர் ஆக்குக! மாவட்டத்திற்கு ஒரு பூசகர் பயிற்சிப் பள்ளி நிறுவி, தமிழ் மந்திரப் பூசகர்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியில் அமர்த்துக!

3. தமிழ்ச் சைவர்களின் தலைமைப் பீடமான சிதம்பரம் நடராசர் திருக்கோயிலில் நடைபெறும் தீட்சிதர்களின் வணிக வேட்டையைத் தடுக்கவும், அவர்களின் அடாவடித்தனங்களை அகற்றவும், அத்திருக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறையில் சேர்த்திடுக!

4. செங்கலப்பட்டில் திறக்கப்பட்டுள்ள ஓகம் (யோகா) உயராய்வு மையத்திற்கு ஓகக் கலையின் மூலவரான “திருமூலர்” பெயரைச் சூட்ட வேண்டும்.

5. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில், தமிழ்ச் சிவநெறிக்குப் புறம்பாகவும், ஆன்மிக ஒழுக்கத்திற்குப் புறம்பாகவும், மலைவாழ் விலங்குகள் மற்றும் உயிரினங்களின் வாழ்வுரிமையைப் பறித்தும் சுற்றுச்சூழலைச் சூறையாடியும், வணிக வேட்டை நிறுவனமாக சக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தை உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்து, சக்கி வாசுதேவ் குழுவினர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தில். தமிழின உணர்வாளர்களும், தமிழர் ஆன்மிகப் பற்றாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response