பிரபாகரத் தமிழனின் பேராண்மை – வைரமுத்து புகழாரம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரத்தில், அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையைத் தூண்டியதில், இலங்கை பற்றி எரிந்து வருகிறது.

அதன்பின்னர் பாதுகாப்பு கருதி மகிந்த ராஜபக்சேவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் நேற்று காலையில் படையினரால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் திரிகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மகிந்த ராஜபக்சே, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….

நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
‘தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற
பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே…

ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே…

ஓ சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response