நேற்று தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37 ஆவது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்.
உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது மொழியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும்.
அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி இந்தியில் தான் தயாராகும். வடகிழக்கின் 8 மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு, இந்திய ஒன்றியமெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள் பலரும் அமித்ஷாவின் பேச்சு அபத்தம் என்று சொல்லியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கங்களில், தமிழணங்கு என்கிற தலைப்பிட்ட ஓர் ஓவியத்தையும் அதன் கீழே, உரிமைத் தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர் என்கிற புரட்சிக்கவிஞரின் வரிகளைப் பகிர்ந்திருந்தார்.
ஒன்றிய அரசுக்கு ஒற்றைப் புகைப்படத்தில் எதிர்வினையாற்றிய ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.