சமக்கிருதம் மற்றும் இந்தித்திணிப்பு மாநில உரிமைப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதக அம்சங்களைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை பாஜக அரசு கொண்டு வர முயல்கிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று (ஆகஸ்ட்.3) வெளியிட்ட அறிக்கையில்…..
தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
1963 ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாகப் பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்தவரையில். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில்தான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், 1965 ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரசு அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து மாணவர்களும் மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களைத் தீவிரமாக நடத்தினர்
மக்களிடையே மும்மொழிக் கொள்கையைப் பற்றி கவலைகள் நீங்காததால், அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று ‘தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது’ என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாடத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.
அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் எம்ஜிஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவர் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, அதாவது 13.11.1986 அன்று, இருமொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா, ‘இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும், உறுதியாக உள்ளோம்’ என்று சூளுரைத்தார். மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார்.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இந்தித் திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர்.
இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழிவந்த தமிழக அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டபோதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதைச் சுட்டிக் காட்டி , அதனைத் தீவிரமாக எதிர்த்தும் மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைப்பிடிப்போம் என உறுதிபடத் தெரிவித்து 26.6.2019 அன்றே பிரதமரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே தமிழக அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதைக் கடந்த ஆண்டு எனது சுந்தந்திர தின உரையிலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.
தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது அந்தப் பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு அதிமுக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிக்கையையொட்டி, புதிய கல்வித் திட்டத்தில் முதலமைச்சர் இந்தியைத் தவிர மற்றவற்றை ஆதரிக்கிறாரா? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நடுவண் அரசின் புதிய கல்வித் திட்டம் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று (03.08.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், அதில் உள்ள மும்மொழித் திட்டத்தையும், இந்தி மொழித் திணிப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்க செய்தி!
ஆனால், வருந்தத்தக்க செய்தி என்னவெனில் இளம் பிஞ்சுகளின் கல்வி கற்றலைச் சீர்குலைத்து மறைமுகமாகக் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கும் வகையிலும், மழலையர் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை அனைத்தும் நடுவண் அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதையும் விமர்சித்து ஒரு சொல்கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமது அறிக்கையில் கூறாதது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. அவற்றையெல்லாம் முதலமைச்சர் ஏற்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இயக்கங்களும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் புதிய கல்வித் திட்டத்தை – அதன் இந்தித் திணிப்பு – வர்ணாசிரம நோக்கு – மாணவர்களை உயர்கல்வி செல்லாமல் கழித்துக்கட்டும் விதிமுறைகள் – மாநில உரிமைப் பறிப்பு – ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்திற்காகவும் எதிர்க்கின்றன.
மோடி அரசின் புதிய கல்வித் திட்டத்தில் திருத்தங்கள் கோரிப் பயனில்லை. முற்றிலும் அத்திட்டத்தைக் கைவிட்டு, மாநில அரசுகளின் பங்களிப்புடன் – பல்துறைக் கல்வி மற்றும் உளவியல் வல்லுநர்கள் பங்கேற்பில் புதிய ஆய்வுக் குழு அமைத்து, புதிதாக ஒரு வரைவுக் கல்வித் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் மோடி அரசு, தனது புதிய கல்வித் திட்டத்தை முரட்டுத் தனமாகத் திணித்தால், “புதிய கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு ஏற்காது” என்ற முழக்கத்துடன் ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும், அனைத்து இயக்கங்களும், அனைத்து மக்களும் இணைந்து இந்திய அரசுக்குத் தெரிவிக்கும் பரப்புரைகளையும் அறப்போராட்டங்களையும் நடத்த வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக புதிய கல்வித் திட்டத்தை முற்றிலுமாக மறுக்கிறோம்; அதைச் செயல்படுத்த மாட்டோம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் இந்திய அரசுக்குத் தெரிவிக்க வெண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.