பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்ட முன்வடிவு – பெ.மணியரசன் எழுப்பும் ஐயங்கள்

வேளாண் மண்டலச் சட்டத்தில் குறைபாடுகள் அதிகம் என்று கூறி காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்திடும் நோக்கில் இன்று (20.02.2020) காலை சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள சட்ட முன்வடிவு பல்வேறு முகாமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளது.

காவிரிப்படுகையில் ஏற்கெனவே செயலில் உள்ள திட்டங்களுக்கும், தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரிப்படுகையில் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐட்ரோ கார்பன் எடுக்க ஏலம் எடுத்துள்ள இடங்களையும், திட்டங்களையும் இச்சட்டம் ஒன்றும் செய்யாது என்றாகிறது.

இது இச்சட்டத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கத்திற்கே பொருத்தமில்லாமல் அமைகிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மேம்பாட்டு மண்டலத்தில் திருச்சி மாவட்டத்தின் முசிறி, லால்குடி, புள்ளம்பாடி ஆகிய பகுதிகளும், கரூர் மாவட்டத்தின் குளித்தலை பகுதியும், அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் பகுதியும், கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் பகுதியும் இணைக்கப்படாமல் விடுபட்டுள்ளன. இப்பகுதிகள் காவிரிச் சமவெளியின் முக்கியமான வேளாண் பயிர் படுகைகளாகும்.

தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், திருச்சி மாவட்டம் சேர்க்கப்படவில்லை என்று முதலமைச்சர் கூறிய பதில் சரியில்லை.

இவை அனைத்தையும் நிதானமாக ஆய்வு செய்து, முதலமைச்சர் அச்சம் தெரிவித்துள்ள சட்டச் சிக்கல்களும் எழாதவாறு சிறப்பான சட்டத்தை உருவாக்குவதற்கு வகை செய்ய, இச்சட்ட முன்வடிவை சட்டமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற இச்சட்டத்தி்ன் நோக்கத்திற்கு இடையூறாக உள்ள திட்டங்களை நிறுத்தி வைப்பதில் ஒன்றிய அரசும் துணை செய்ய வேண்டுமென்று கோரி கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் கூறுகிறார்.

அவசர அவசரமாக அரைகுறையாக இச்சட்டம் இயற்றப்பட்டிருப்பதும், இந்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டோம் என்று கூறுவதும் இந்த சட்டமும் “நீட்” விலக்கு சட்டம்போல ஆகிவிடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

சிறப்பு வேளாண் மண்டல நிர்வாகத்தை கவனிக்க முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு மாறாக, தன்னாட்சி அதிகாரமுள்ள வல்லுநர் குழுவாக அமைத்திருக்க வேண்டும். அதில் உழவர் பிரதிநிதிகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இச்சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பும் முன் விரிவான ஆய்வு செய்து, உரிய வல்லுநர்களைக் கொண்டு தேவையான வேண்டிய திருத்தங்கள் செய்து காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உண்மையில் மாற்றுவதற்கு வெளிப்படையாக செயல்பட வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வலியுறுத்தியும், ஐட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று கோரியும், மக்கள் திரள் போராட்டம் நடத்தியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பிணை மறுப்புப் பிரிவுகளில் போடப்பட்டுள்ளன. பல கட்டங்களில் பலரை சிறையிலும் அடைத்தார்கள். பேராசிரியர் த. செயராமன் உள்ளிட்ட அனைவர் மீதும் போடப்பட்ட இவ்வழக்குகள் அனைத்தையும் இச்சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கைவிட ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response