தமிழ்த்தாய்க்கு முதலிடம் வேண்டி தீர்மானம் – அனைத்துக்கட்சிகள் ஆதரவு

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து வந்தே மாதரம் பாடல் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது.அதோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் கடைசிக்குத் தள்ளிவிட்டார்கள்.இதைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் பேசிவந்த நிலையில்,தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மட்டுமே முதலிடம் என்கிற அரசினர் தனிதீர்மானம் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு திமுக,அதிமுக,பாமக,காங்கிரசு,விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதாவது….

மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே.அதை யாரும் மறுக்கமுடியாது.உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும்,அதையும் மறுக்கமுடியாது.ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல.பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல.தமிழ் நமது உயிர்.நமது உணர்வு.

நம்மைப் பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம்,சொந்தமும் நம்மை அறியாமலே நமக்குள் உயிராக, உணர்வாக தோன்றுவதுபோல,தமிழும் இருக்கும்.தாய் எப்படி மிகப்பெரிய புனிதமோ அதுபோலதான் தாய்மொழியும்.

நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றிச் சொல்லவா வேண்டும். தாயைப் போற்றுகிற வாழ்த்துகிற தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடமுடியும்,விடவும் மாட்டோம்.நமது தமிழ்த்தாய் வாழ்த்து 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ்மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாகப் பாடினார்.

இந்திய துணைக்கண்டத்தை இந்திய ஒன்றியதை அழகியமுகமாக கூறிய மனோன்மணியம் சுந்தரனார்,அந்தமுகத்தோட நெற்றியில் வைக்கிற திலகம்தான் தமிழ்நாடு என்றார்.இந்தியாவின் நெற்றியில் இருக்குற போட்டு மாதிரி,ஒரு வெற்றிப்பொட்டுதான் தமிழ்நாடு.அதன் நறுமணம் உலகம் முழுவதும் பரவுவதுபோல,தமிழின் புகழும் உலகம் முழுக்க பரவவேண்டும் என்றார்.

இன்று உலகில் தமிழ்பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான்.தமிழும்,தமிழனும் இல்லாத நாடு இல்லை. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு பண்பாடு.அது ஒரு சிந்தனை,அது ஒரு அன்பு.தமிழ் என்றால் விருந்தோம்பல்.சுருக்கமாகச் சொன்னால்,தமிழ் என்றால் கெத்து.தமிழ் என்றால் பவர்.

தமிழோட புகழைக் கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்திப் பிடிக்கிறது.தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழி,மதம்,இனத்தையும்,எந்த தனிமனிதனையும் தாழ்த்திப் பேசவில்லை.கொஞ்சமும் காயப்படுத்தவில்லை.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கும்.ஒரு கூட்டத்தில் தமிழ் என்று அழைத்தாம் நாம் ஒட்டுமொத்தமாகத் திரும்பிப்பார்ப்போம்.தமிழ் என்ற சொல்லே,பெயரே மிகப்பெரிய வரலாறு.ஒரு கட்சிக்கு பிரச்சினை என்றால், சம்மந்தப்பட்ட அந்தக்கட்சி மட்டுமே போராடும்.ஆனால்,தமிழுக்கு பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னே வந்து நிற்கும்.

உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.ஆனால்,தமிழ் காலம் காலமாக நிலைத்து, நீடித்து நிற்கிறது.தமிழில் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கணம்,இலக்கியம் எல்லாம் உள்ளது நம் பெருமையை சொல்வதற்கு.இத்தனை பெருமையை கொண்ட தமிழ்மொழியின் அடையாளம்தான் தமிழ்த்தாய் வாழ்த்து. ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப்பேசும் தமிழ்த்தாய் வாழ்த்து,நம் தமிழ்நாட்டில் முதல்இடத்தில் இருக்கவேண்டும்.

நம் அரசியல் சாசனமே ஒவ்வொரு மாநிலத்தின் மொழிக்கும்,பண்பாட்டுக்கும்,பாரம்பரியத்துக்கும் உரிமையைக் கொடுத்துள்ளது.அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். அதுதான் மாநில உரிமை.

தமிழ்த்தாய் வாழ்த்தை 1970 நவம்பர் 23 முதல் அரசுவிழாக்களில் முதலில் பாடவேண்டும் என அரசாணை வெளியிட்டு நடைமுறைக்கு வந்தது.அதன்பின்னர் 2021 டிசம்பர் 17 முதல் மாநிலப்பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.அனைத்து தொழில்,பொதுநிறுவனங்களின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை உள்ளது.

2026 ஜனவரி 28 ஆம் தேதி ஒன்றிய அரசு,அரசுவிழாக்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டது.அதில் மாநிலப்பாடல் குறித்து எந்த வழிமுறையும் இல்லாது இருந்தது.இதனால் கடந்த ஜூலை 9 இல் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை காப்பதில் நம் அரசு எந்த சமரசமும் செய்யாது.தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது அரசியலமைப்புக்கு,இந்திய ஒற்றுமைக்கு எதிரானது அல்ல.மாறாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் உயர்ந்த கொள்கையை வெளிப்படுத்துவது ஆகும்.தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடவேண்டும் என்பது அரசியல் விவாதமாக மாறவேண்டிய அவசியம் இல்லை.இது தமிழர்களின் பொது அடையாளம்.இது நம்மை வேறுபடுத்துவது அல்ல,ஒன்றிணைப்பது.

தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும்,தமிழின் தொன்மையை,தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் அனைத்துக்கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளை மறந்து,அனைத்து பல்கலைக்கழகங்கள்,கல்வி நிறுவனங்கள்,பொதுத்துறை மற்றும் அரசுநிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்படவேண்டும் என்ற இந்த தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response