பழிவாங்கியது நியூசிலாந்து – அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மட்டைப்பந்து அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் ஆடுகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2 ஆவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, நியூசிலாந்து அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

நியூசிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மார்டின் குப்தில் (79 ரன்கள்), நிகோலஸ் (41 ரன்கள்) என தொடக்க ஆட்டக்காரர்கள் கணிசமான பங்களிப்பை அளித்தனர். ஆனால், அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், நியூசிலாந்து அணி 197 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், 250 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என எதிர்பார்த்த நிலையில், ரோஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ் டெய்லர் (73 ரன்கள்) எடுத்தார்.

இதனால்,நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில், சஹால் 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தது.

தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 3 ரன்னிலும், ப்ரிதிவ் ஷா 24 ரன்னிலும், விராட் கோலி 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சற்று நிலைத்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் 52 ரன்களில் பென்னட் பந்துவீச்சில் அவுட்டானார். இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் இறுதியில் ரவீந்திர ஜடேஜா தனிஒருவராக வெற்றிக்கு போராடினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில ்வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

20 ஓவர் தொடரை இழந்ததற்குப் பழிவாங்கும் விதமாக ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிவிட்டது நியூசிலாந்து.

Leave a Response