வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். துரைமுருகனின் வீட்டில் மார்ச் 30 ஆம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மொத்தம் ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக , ஏப்ரல் 10 ஆம் தேதி, வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை, கதிர் ஆனந்த் மற்றும் இரண்டு திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்தச் சூழலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் இரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெய்பாலி சரண் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 18 இல் தேர்தல், இந்நிலையில் அத்தொகுதி மட்டுமல்ல எல்லாத்தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன். இந்நிலையில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்திருப்பதால் அத்தொகுதியில் தேர்தல் இரத்தாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.